இந்தியப் பொருட்களின் மீதான அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மத்திய அரசிடம் முன்வைத்த கோரிக்கைகளை வலியுறுத்தி, உடனடி நிவாரணம் மற்றும் அமைப்புரீதியான சீர்திருத்தங்கள் மூலம் தொழிற்சாலைகள் மற்றும் பணியாளர்களைக் காக்க வேண்டுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏற்கெனவே, கடந்த 16-ம் தேதி அன்று இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியுள்ளதால், தமிழ்நாட்டில் பின்னலாடை உள்ளிட்ட பல்வேறு தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தை சுட்டிக்காட்டி வீடியோ வெளியிட்டுள்ள அவர், அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு தமிழ்நாட்டின், குறிப்பாகப் பின்னலாடை மையமான திருப்பூரின், ஏற்றுமதி வர்த்தகத்தினைப் பெரிதும் பாதித்துள்ளது. ஆண்டுக்கு 3000 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பதோடு, பல்லாயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்பும் இதனால் பாதிப்படைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மத்தியஅரசிடம் முன்வைத்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துவதாகவும், உடனடி நிவாரணம் மற்றும் அமைப்புரீதியான சீர்திருத்தங்கள் மூலம் நமது தொழிற்சாலைகள் மற்றும் பணியாளர்களைக் காக்க வேண்டுவதாகவும் அதில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.