Thanks to natureregarding the Cauvery issue, Karnataka released 10,000 cubic feet of water from Kabini  AI generated
இந்தியா

”3,500 இல்லை 10,000 கனஅடி திறப்பு” : இயற்கையிடம் மண்டியிட்ட கர்நாடகா, நிரம்பியது கபினி : திங்கட்கிழமை தமிழகம் வரும்.!

காவிரி பிரச்னையில் இயற்கையின் கருணையால், கபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீரை திறந்து விட்டு இருக்கிறது கர்நாடக அரசு.

Kannan

தண்ணீர் தர மறுத்த கர்நாடகம்

தென்மேற்கு பருவமழை எதிர்பார்ப்பு அளவு பெய்யாததை காரணம் காட்டி, தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகம் பிடிவாதமாக மறுத்து வந்தது.

காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் தண்ணீர் திறந்து விட முடியாது என்றார் அம்மாநில முதல்வர் டி.கே. சிவக்குமார். மேலும் முதல்வர் விஜயும் நேரில் பேச வர வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

3,500 இல்லை 10,000 கனஅடி

இந்நிலையில் தான் 3,500 கனஅடிக்கு பதில் 10,000 கனஅடி தண்ணீரை காவிரியில் திறக்க வேண்டிய நிலைக்கு கர்நாடகா தள்ளப்பட்டுள்ளது

நிரம்பி வழியும் கர்நாடக அணைகள்

கர்நாடகாவின் கபினி அணை 95 சதவீதம் நிரம்பி இருப்பதாகவும், ஹேரங்கியில் 85 சதவீத நீர் இருப்பதாகவும் அவர் கூறி இருந்தார். இந்தநிலையில், கேரளாவில் பருவமழை தீவிரம் பெற்று இருக்கிறது.

முழு கொள்ளளவில் கபினி

இதன்காரணமாக கபினி அணை இன்று மாலை முழு கொள்ளளவை எட்டியது. வயநாட்டில் நேற்று மாலை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கபினிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

அணைக்கு வினாடிக்கு 15,500 கனஅடி நீர் வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 2,274 அடியை (கடல்மட்டத்தில் இருந்து) தாண்டி உள்ளது. இதனால் கபினி அணையின் பாதுகாப்பு கருதி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வினாடிக்கு 10,000 கனஅடி திறப்பு

அதன்படி கபினி அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இந்தநீர் அதுகபிலா ஆற்றின் வழியாக டி நரசிப்புரா பகுதியில் உள்ள சங்கமம் வந்து காவிரி வழியாக தமிழகத்துக்கு வரும்.

திங்கட்கிழமை தமிழகம் வரும் காவிரி

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை இந்த தண்ணீர் திங்கட்கிழமை வந்து சேரும் எனக் கூறப்படுகிறது. கபினி அணையின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்தால், நீர் திறப்பும் அதிகமாகும் வாய்ப்பு உள்ளது.

வேகமாக நிரம்பும் கேஆர்எஸ்

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் பல இடங்களில் ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் கேஆர்எஸ் அணைக்கு தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் 100 அடியை ( மொத்த கொள்ளளவு 124 அடி ) நெருங்கி வருகிறது. நீர்வரத்து மேலும் அதிகரித்தால், ஓரிரு நாட்களில் அணை முழு கொள்ளளவை எட்டி விடும். அப்போது காவிரியில் தண்ணீரானது திறந்து விடப்படும்.

கர்நாடக அணைகள் முழு கொள்ளவை எட்டி வருவதாக, முதல்வர் டிகே. சிவக்குமாரும் ட்வீட் செய்து இருப்பது, தமிழகத்திற்கு நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது.

=========================