இந்தியாவில் தனியார் ஊழியர்கள்
Union Budget 2026 on EPFO Limit : உலகில் அதிகளவு மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. நமது நாட்டில் உள்ள லட்சக் கணக்கான தனியார் நிறுவனங்களில் கோடிக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி
ஊழியரின் அடிப்படைச் சம்பளம் ரூ.15,000 வரை இருந்தால் மட்டுமே இபிஎஃப் திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பு கடைசியாக 2014 ஆம் ஆண்டு ₹6,500 லிருந்து ₹15,000 ஆக உயர்த்தப்பட்டது.
பிஎஃப் உச்சவரம்பு - ரூ.30,000?
கடந்த 10 ஆண்டுகளில் பணவீக்கம் மற்றும் ஊதிய உயர்வு அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய வரம்பு மிகவும் குறைவாக இருக்கிறது.
இதனை ₹30,000 ஆக உயர்த்துவதன்(epfo wage ceiling hike) மூலம், அதிக வருமானம் ஈட்டும் ஊழியர்களும் கட்டாய பிஎஃப் வரம்பிற்குள் கொண்டு வரப்படுவார்கள்.
ஊழியர்களுக்கு அதிக பயன்
பிஎஃப் பங்களிப்பு அதிகரிக்கும் போது, ஊழியரின் ஓய்வுக்கால சேமிப்பு மற்றும் இபிஎஸ் (இபிஎஸ்) மூலம் கிடைக்கும் ஓய்வூதியத் தொகை கணிசமாக உயரும்.ஊழியரின் பங்களிப்புடன் சேர்த்து நிறுவனத்தின் பங்கும் அதிகரிப்பதால், நீண்ட கால அடிப்படையில் ஊழியர்களுக்கு இது அதிக லாபத்தைத் தரும்.
பிஎஃப் பிடித்தம் அதிகரிப்பதால், ஊழியர்கள் மாதந்தோறும் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளம் (Take-home salary) சற்று குறைய வாய்ப்புள்ளது.
இது பாதிப்பாக பார்க்கப்பட்டாலும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இது அவசியமாகிறது.
நிறுவனங்களுக்கு சவால்கள்
பிஎஃப் வரம்பை உயர்த்துவது நிறுவனங்களுக்குக் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும். ஏனெனில், ஊழியர்களின் பிஎஃப் கணக்கிற்கு நிறுவனம் வழங்கும் பங்களிப்புத் தொகையும் இருமடங்காக அதிகரிக்கும்.
சிறு மற்றும் குறு நிறுவனங்கள் (MSMEs) இந்த மாற்றத்தால் நிதி நெருக்கடியைச் சந்திக்கக்கூடும் என்பதால், இது குறித்து தொழிலாளர் அமைச்சகம் விரிவான ஆலோசனைகளை நடத்தி வருகிறது.
வலுவான சமூக நிதிப் பாதுகாப்பு
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், தனியார் துறையில் பணிபுரியும் ஒரு மிகப்பெரிய சமூகத்திற்கு வலுவான நிதிப் பாதுகாப்பு கிடைக்கும் என்பது உறுதி. எனவே, பிப்ரவரி முதல் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் பிஎஃப் தொகைக்கான உச்சவரம்பு அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
===============