எல்.முருகன் அறிக்கை
L. Murugan on DMK Government : திமுக நாடகம் அரங்கேற்றி வருகிறது என அறிக்கை வெளியிட்டுள்ள இணை அமைச்சர் எல்.முருகன். அதில், மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, தினமும் மூன்று வேளை இலவச உணவு திட்டத்தை, இம்மாதம், 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பதாக, தி.மு.க., அரசு அறிவித்துள்ளது. தனியார் மயமாக்கலை எதிர்த்து, 13 நாட்களாக போராடிய துாய்மை பணியாளர்களை, நள்ளிரவில் தி.மு.க., அரசின் காவல்துறை கைது செய்தது.அவர்கள் பல வழிகளில் போராடிக் கொண்டு இருக்கின்றனர்.
நாடகத்தை அரங்கேற்றுகிறது திமுக அரசு
தனியாருக்கு தாரை வார்த்ததால், மாதம், 23,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கிய பணியாளர்கள், 16,000 ரூபாய் சம்பளம் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோபத்தில் உள்ள அவர்களை திசை திருப்ப மூன்று வேளை உணவு என்ற நாடகத்தை, தி.மு.க., அரங்கேற்றுகிறது. 'கலெக் ஷன், கரப்ஷன், கமிஷன்' என, முழு மூச்சாக காலத்தை கடத்தும் தி.மு.க., அரசு, எப்படி உணவு வழங்கும் என்பதை சொல்லவா வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பணம் பறிக்கும் திட்டம் திமுகவுக்கு தெரியும்
துாய்மை பணியாளர்களின் பணிகளை, வேண்டப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து விட்ட தி.மு.க., அரசு, உணவு தயாரிக்கும் பணியையும் வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்க, 'டெண்டர்' கோரி இருப்பதாக தெரிகிறது. மொத்தத்தில், துாய்மை பணியாளர்களின் பெயரை சொல்லி, ஏமாற்றி பணம் பறிக்க மட்டுமே தி.மு.க.,வுக்கு தெரியும்.
முதல்வர் ஸ்டாலின் விளம்பர மோசடி பிரசுரங்களை கைவிடவேண்டும்
முதல்வர் ஸ்டாலினுக்கு, துாய்மை பணியாளர்கள் மீது துளிஅளவாவது அக்கறை இருந்தால், விளம்பர மோசடி பிரசாரங்களை கைவிட்டு, நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்டவைகளை அறிக்கையின் மூலம் விமர்சித்துள்ளார்.