மேற்கு வங்கமும், மீன் உணவும்
இந்தியாவில் மீன் நுகர்வு அதிகமாக உள்ள மாநிலங்களில் ஒன்று மேற்கு வங்கம். அதிக நதிகளை இந்த மாநிலம் கொண்டு இருப்பதால், பொதுமக்களில் பெரும்பாலானோர் மீனை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
மீன் அசைவ உணவு பட்டியலில் இருந்தாலும், சைவ உணவாளர்களும் அதை விரும்பி உண்பதை காணலாம்.
புகார் கிளப்பிய மம்தா
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மீன் உள்ளிட்ட பெங்காலி வகை உணவு முறையை தடை செய்து விடுவார்கள் என முதல்வர் மம்தா பானர்ஜி முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் புகார் எழுப்பினார்.
மீன் அரசியல்
இதை மறுக்க வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டது. இதனால் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்திலும் மீன் அரசியல் முக்கிய இடம் பிடித்தது.
மீனை கையிலெடுத்த பாஜக
பாஜக எம்பி அனுராக் தாக்கூர் மீன் சாப்பிடும் காட்சிப்பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக தலைவர்களில் பலர் தங்கள் கைகளில் மீன்களை ஏந்தியபடியே பிரச்சாரம் செய்தனர்.
போஜ்புரி மொழி திரைப்பட நாயகரும் உ.பி.யின் கோரக்பூர் எம்.பி.யுமான ரவி கிஷன் தனது பிரச்சாரக் காட்சிப்பதிவில், “தேர்தல் முடிவு வெளியாகும் மே 4ம் தேதிக்குப் பிறகு, நீங்கள் வழக்கத்தை விட நான்கு மடங்கு மீன் சாப்பிடுங்கள்.
மீனுக்கு பஞ்சம் இருக்காது
அனைத்து வகை மீன்களையும் நாங்கள் இங்கு கொண்டு வந்து சேர்ப்போம். என்டிஏ ஆட்சி செய்யும் மாநிலங்களில் இருந்து மீன்களைக் கொண்டுவந்து மேற்கு வங்கக் கிணறுகள் மற்றும் குளங்களில் விடுவோம்.
எனவே அதிக மீன் சாப்பிடுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது" என்றார்.
மம்தாவை திணறடிக்கும் பாஜக
தனது வாக்கு வங்கியை தக்க வைக்க மம்தா பானர்ஜி கையிலெடுத்த மீன் அரசியல், அவருக்கு எதிராக திரும்பி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
மீன் உணவு புள்ளி விவரம்
மத்திய அரசின் தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் தரவுகளின்படி, நாடு முழுவதும் 45.7% ஆண்களும், 35.7% பெண்களும் மீன் உண்கின்றனர். தேசிய அளவில் ஆண்களே அதிக அளவில் மீன் உண்பவர்களாக இருந்தாலும், மேற்கு வங்க நிலைமை இதற்கு மாறாக உள்ளது. இங்கு 87.8% பெண்களும், 87.4% ஆண்களும் மீன் உண்கின்றனர்.
====