பஞ்சாப் அரசியல் களம்
Congress Suspended Navjot Kaur Sidhu Days After 500 Crores Remark : பஞ்சாபில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர், கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து. தற்போது, பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2022ல் நடந்த சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மியிடம் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்தது.
தீவிர அரசியலை ஒதுக்கிய சித்து
தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை சித்து தவிர்த்து வருகிறார். 2024 மக்களவை தேர்தலிலும் அவர் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. இந்தநிலையில், அவரது மனைவி நவ்ஜோத் கவுர் தெரிவித்த ஒரு கருத்து பஞ்சாப் அரசியலில் புயலை கிளப்பி இருக்கிறது.
500 கோடி கொடுத்தால் ’முதல்வர்’
'பஞ்சாபில், 500 கோடி ரூபாய் கொடுப்பவர்களே முதல்வர் நாற்காலியில் அமர்கின்றனர். இது எல்லா கட்சியிலும் நடக்கிறது. ஆனால், எந்த கட்சிக்கும் கொடுப்பதற்கு எங்களிடம் பணம் இல்லை' என்று நவ்ஜோத் கவுர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.
காங்கிரசில் பணமூட்டை அரசியல்
காங்கிரசில் பண மூட்டை அரசியல் விளையாடுவதாக ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா கட்சிகள் விமர்சித்தன. ஆளும் ஆம் ஆத்மியின் பஞ்சாப் பொதுச்செயலர் பல்தேஜ் பன்னு, ''500 கோடி ரூபாய் கொடுத்தால் தான் காங்கிரசில் முதல்வர் பதவி என்றால், அக்கட்சியின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ள '' இதை விட வேறு என்ன சாட்சி வேண்டும்?'' என்று காட்டமாக விமர்சித்து இருந்தார்.
நவ்ஜோத் கவுர் விளக்கம்
பிரச்சினை பெரிதாகவே, சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்த நவ்ஜோத் கவுர், காங்கிரஸ் மேலிடம் தங்களிடம் எந்த பணமும் கேட்கவில்லை, தனது பேட்டி திரித்து வெளியிடப்பட்டு இருப்பதாக” கூறினார்.
காங்கிரசில் இருந்து சஸ்பெண்ட்
இருப்பினும், காங்கிரஸ் கட்சி மீது தொடர் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதால், வேறு வழியின்றி, நவ்ஜோத் கவுரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி உத்தரவிட்டு இருக்கிறது.
===