Frequent Headache Warning Signs Types and Remedies Tamil
"என்னங்க அடிக்கடி தலைவலி உயிர்போற மாதிரி வலிக்குதா?" - உங்களுக்கு மட்டுமில்ல, உலகத்தில் இருக்கும் கோடிக்கணக்கான மனிதர்களுக்கு இருக்கும் ஒரு மிகப்பொதுவான பிரச்சனைதான் இந்த 'தலைவலி'.
தலைவலியில் கவனம் தேவை
நம்மில் பலரும் தலைவலி வந்தா உடனே ஒரு மாத்திரையைப் போட்டுட்டு வேலையைப் பார்க்கப் போய்விடுவோம். பெரும்பாலும் தலைவலிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது என்றாலும், ஒரு வாரத்தில் பல முறையோ அல்லது மாதத்தில் 10 முதல் 15 நாட்களுக்கு மேலேயோ தொடர்ந்து தலைவலி வந்தால், அதை சாதாரணமாகக் கடந்து போகாதீர்கள்; அது ஆபத்தில் கூட முடியலாம்.
தலைவலி வகைகள், காரணம், பின்னணி என்ன?
இங்கே ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நமது மூளைக்கு நேரடியாக வலியை உணரும் திறன் கிடையாது. மூளையைச் சுற்றியுள்ள ரத்த நாளங்கள், நரம்புகள், தசைகள் மற்றும் திசுக்களில் ஏற்படும் அழுத்தங்களும் மாற்றங்களும்தான் நமக்குத் தலைவலியாகத் தோன்றுகிறது.
அடிக்கடி வரும் தலைவலியின் பின்னணி, அதன் வகைகள் மற்றும் ஆபத்தான எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
தலைவலியின் முக்கிய 4 வகைகள்
தலைவலியில் பல வகைகள் இருந்தாலும், நரம்பியல் ரீதியாக நாம் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிய 4 வகைகள் இதோ
1. மைக்ரேன் (Migraine):
இது ஒரு சாதாரண தலைவலி அல்ல, நரம்பியல் சார்ந்த ஒரு தீவிர நோயாகும். தலையின் ஒரு பகுதியில் மட்டும் துடிப்பு போன்ற கடுமையான வலி, குமட்டல், வாந்தி மற்றும் வெளிச்சத்தையோ அல்லது சத்தத்தையோ தாங்க முடியாத நிலை ஏற்படும்.
சிலருக்குக் கண் முன்னாடி மின்னல் அல்லது ஒளிக்கோடுகள் தோன்றுவது போன்ற உணர்வும் இருக்கும். இது 4 முதல் 72 மணி நேரம் வரை நீடிக்கக்கூடியது.
2. டென்ஷன் தலைவலி (Tension Headache)
இன்றைய கார்ப்பரேட் உலகில் பலருக்கும் வரக்கூடிய மிக பொதுவான தலைவலி இது. மன அழுத்தம், அதிக வேலைப்பளு மற்றும் தூக்கமின்மையால் இது ஏற்படுகிறது.
தலையைச் சுற்றி யாரோ இறுக்கமாக கட்டி வைத்தது போன்ற வலியும், கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதியில் லேசானது முதல் மிதமான வலியும் இருக்கும்.
3. கிளஸ்டர் தலைவலி (Cluster Headache)
இது ஒரு பக்கமாக வரக்கூடிய மிகவும் கடுமையான மற்றும் கொடூரமான தலைவலி வகை. ஒரு கண்ணைச் சுற்றி தாங்க முடியாத அளவுக்கு வலி ஏற்படுவதுடன், கண்ணில் நீர் வடிதல், மூக்கு அடைப்பு அல்லது நீர் ஒழுகுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். இது ஒரு குறிப்பிட்ட காலங்களில் தினமும் ஒரே நேரத்தில் வரக்கூடியது.
4. சைனஸ் தலைவலி (Sinus Headache)
சளி, அலர்ஜி அல்லது சைனஸ் தொற்றுகளால் நெற்றி மற்றும் கன்னப் பகுதிகளில் கடுமையான அழுத்தம் ஏற்பட்டு இந்த வலி உண்டாகிறது. மூக்கடைப்புடன் சேர்ந்து காய்ச்சல் மற்றும் முகத்தில் வலியும் இருக்கும்.
வாழ்க்கை முறையும்... பெண்களுக்கு ஏன் இந்த பாதிப்பு அதிகம்?
நமது அன்றாடப் பழக்கவழக்கங்கள் கூடத் தலைவலிக்கு முக்கியக் காரணங்களாக அமைகின்றன. போதிய தூக்கமின்மை, உடலில் நீர்ச்சத்து குறைவது (Dehydration),
நேரத்திற்கு சாப்பிடாமல் உணவைத் தவிர்ப்பது, நீண்ட நேரம் மொபைல் அல்லது கம்ப்யூட்டர் திரையைப் பார்ப்பது, அதிகப்படியான டீ அல்லது காபி குடிப்பது,
புகை மற்றும் மதுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சியே இல்லாத வாழ்க்கை முறை போன்றவற்றால் தலைவலி அடிக்கடி தலைதூக்கும்.
பெண்களுக்கு ஏன் அதிகம்?
ஆண்களை ஒப்பிடும்போது பெண்களுக்கு மைக்ரேன் போன்ற தலைவலி பாதிப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இதற்கு பெண்களின் உடலில் ஏற்படும் 'ஈஸ்ட்ரோஜன்' ஹார்மோன் மாற்றங்களே முக்கியக் காரணம்.
குறிப்பாக மாதவிடாய் காலம், கர்ப்ப காலம், மெனோபாஸ் பருவம் மற்றும் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும் காலகட்டங்களில் பெண்களுக்கு தலைவலி வருவதற்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகரிக்கிறது.
ஆபத்தை எச்சரிக்கும் அறிகுறிகள்
இப்போது நாம் பார்க்கப்போகும் அறிகுறிகள் இருந்தால், நீங்கள் ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். இவற்றை மருத்துவ உலகில் "ரெட் பிளாக்"அல்லது ஆபத்தான அறிகுறிகள் என்று அழைக்கிறார்கள்:
வாழ்க்கையிலேயே இதுவரை அனுபவிக்காத அளவுக்கு திடீரென வரக்கூடிய மிகக் கடுமையான தலைவலி.
தலைவலியோடு சேர்ந்து கை அல்லது கால்களில் பலவீனம் ஏற்படுவது, பேசுவதில் சிரமம் மற்றும் பார்வைக் குறைபாடு அல்லது இரட்டைப் பார்வை (Double Vision) தோன்றுவது.
அதிகப்படியான காய்ச்சலுடன் கழுத்து பகுதி இறுக்கமாக மாறுவது.
தலையில் ஏதேனும் பலத்த காயம் ஏற்பட்ட பிறகு தொடர்ந்து வரும் தலைவலி.
வலிப்பு ஏற்படுவது மற்றும் 50 வயதுக்கு மேல் ஒருவருக்குப் புதிதாகத் தலைவலி தொடங்கினால்.
இந்த அறிகுறிகள் மூளையில் ஏற்படக்கூடிய ரத்தக்கசிவு, பக்கவாதம் (Stroke), மூளையில் கட்டி (Brain Tumor) அல்லது தீவிரத் தொற்றுநோய்களின் ஆரம்ப எச்சரிக்கையாக இருக்கலாம்.
தலைவலிக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி?
முதலில் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம், மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மெடிக்கல் ஷாப்பில் நீங்களாகவே வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
அப்படி சாப்பிட்டால், அதுவே "Medication Overuse Headache" எனப்படும் மாத்திரைகளால் வரக்கூடிய புதிய வகை தலைவலியை உருவாக்கிவிடும்.
தடுப்பதற்கான எளிய வழிகள்
தினமும் 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம்.
ஒரு நாளைக்கு 2.5 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடியுங்கள்.
உணவைத் தவிர்க்காமல் நேரத்திற்குச் சாப்பிடுங்கள் மற்றும் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள்.
மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
உங்களுக்குத் தலைவலி எப்போது வருகிறது, எவ்வளவு நேரம் இருக்கிறது என்பதை ஒரு "Headache Diary"-ல் குறித்து வையுங்கள். இது மருத்துவர்கள் காரணத்தைக் கண்டறியப் பெரிதும் உதவும்.
அடிக்கடி வரும் தலைவலியை வெறும் மன அழுத்தம் தானே என்று அலட்சியமாக விட்டுவிடாதீர்கள். சுய மருத்துவத்தைத் தவிர்த்து, முறையான தகுதி வாய்ந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே பாதுகாப்பானது.
=====