Iranian leader Ayatollah Khamenei,ministers,generals, killed in precise attack carried out by Israel  google
RVS ICC WORLD CUP

”அயதுல்லா கமேனியின் கடைசி நிமிடங்கள்” : கட்டிடத்தை தகர்த்த இஸ்ரேல் : நிமிடங்களில் உயிரிழந்த தலைவர்கள்

இஸ்ரேல் நடத்திய மிகவும் துல்லியமான தாக்குதலில் சில நிமிடங்களில் ஈரான் தலைவர் அயதுல்லா கமேனியும், ஈரானின் அமைச்சர்கள், தளபதிகள் உட்பட 40 பேர் சில நிமிடங்களில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

Kannan

ஈரானின் இரும்பு மனிதர் கமேனி

ஈரான் என்றால் உச்சபட்ட தலைவர் அயதுல்லா கமேனி தான் அனைவரின் நினைவுக்கு வரும். 36 ஆண்டுகள் இரும்புப் பிடியுடன் ஈரான் நாட்டை ஆட்சி செய்தவர் கமேனி. ஈரானை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும், அந்த நாடு அணு ஆயுத தயாரிப்பை தடுக்க வேண்டும் என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர் முயற்சியில் ஈடுபட்டன.

கமேனிக்கு இஸ்ரேல், அமெரிக்கா இலக்கு

இதற்கு உரிய பலன் கிடைக்காததால், தாக்குதல் நடத்தி, கமேனியை தீர்த்து கட்ட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் பல மாதங்களுக்கு முன்பே முடிவு செய்து அதற்கான காய்களை கச்சிதமாக நகர்த்தி வந்தனர்.

துல்லியமாக கண்காணித்த இஸ்ரேல்

இதற்காக கமேனி மற்றும் அவரது ஈரான் அமைச்சர்கள், மூத்த ராணுவ தலைவர்களின் நடமாட்டம் பல மாதங்களாக தொடர்ந்து அமெரிக்காவின் சிஐஏ, மற்றும் இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்புகளால் கண்காணிக்கப்பட்டு வந்தது. அதே நேரத்தில் உலகை திசை திருப்புவதற்காக ஈரானுடன் பேச்சுவார்த்தை என்ற நாடகத்தையும் அதிபர் டிரம்ப் நடத்தி வந்தனர்.

ஈரான் மீது தாக்குதல், பதிலடி

சனிக்கிழமை ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணைகள், குண்டு வீசப்பட்டன.

இதைத்தொடர்ந்து இந்தப் போரில் அமெரிக்காவும் பங்கேற்க பிரச்னை தீவிரம் பெற்றது. பதிலுக்கு, அமெரிக்கா ஆதரவு நாடுகளான பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்க, மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டது.

ஏவுகணைகைள் வீச்சு, கட்டிடம் தரைமட்டம்

பிப்ரவரி 28 மாலை தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஒரு வளாகத்தில் முக்கிய அரசு, ராணுவ அதிகாரிகளை உச்ச தலைவர் கமேனி சந்திக்க உள்ளதாக சிஐஏக்கு தகவல் கிடைக்க, அந்த கட்டிடம் கண்காணிக்கப்பட்டது.

பின்னர் அதிகாலையில் கூட்டம் நடைபெற இருந்தது. இதற்காக கமேனியும் அவரது குடும்பத்தினரும் ஒரு கட்டிடத்தில் தங்கி இருந்தனர்.

கமேனி குடும்பத்தினருடன் உயிரிழப்பு

இதை நோட்டமிட்டு, உறுதி செய்து கொண்ட இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ச்சியாக 30க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி அந்தக் கட்டிடத்தை தரை மட்டமாகின. என்ன நடக்கிறது என்பதை யூகித்து, தப்பிக்க முயற்சிப்பதற்குள், அயதுல்லா கமேனி அவரது மகள், மருமகன், பேத்தி பலியானார்கள்.

ராணுவ உயர் அதிகாரிகளும் பலி

அதற்கு அடுத்த கட்டிடத்தில் இருந்த ஈரானின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள், ராணுவ அமைச்சர், ராணுவ மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் இஸ்ரேலின் அதிரடி தாக்குதலில் அடுத்த ஒரு நிமிடங்களுக்குள் கொல்லப்பட்டனர்.

துல்லிய தாக்குதல் - உறுதிப்படுத்திய இஸ்ரேல்

உளவுத்துறையின் வழிகாட்டுதலின் கீழ் இஸ்ரேலிய விமானப்படை நடத்திய ஒரு துல்லியமான, பெரிய அளவிலான நடவடிக்கையில் கமேனி கொல்லப்பட்டார்.

ஈரானிய பாதுகாப்புத் தலைமையின் மிக உயர்ந்த பதவியில் இருந்த மூத்த ராணுவ அதிகாரிகளில் பெரும்பாலோர் அழிக்கப்பட்டுவிட்டனர் என இஸ்ரேல் அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

பேரழிவை சந்திப்பீர்கள் - ஈரான் எச்சரிக்கை

இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஆவேசத்துடன் பேசிய ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப், “அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானின் சிவப்பு கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி விட்டன.

அதன் தலைவர்கள் மிகவும் இழிந்த குற்றவாளிகள். இஸ்லாமிய குடியரசு மீதான உங்களின் தாக்குதல்களுக்கு நீங்கள் உரிய விலையை கொடுக்க நேரிடும்.

நாங்கள் பதிலடி தாக்குதல்களை நடத்தும்போது நீங்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள்” என கடுமையாக எச்சரித்தார்.

கமேனி படுகொலை - ஆர்ப்பாட்டங்கள்

கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து, இஸ்லாமிய நாடுகள், இந்தியாவில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான், வங்கதேசத்தில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளன.

காஷ்மீரில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஸ்ரீநகர், லால் சவுக், சைதா கடல், புத்காம், பந்திபோரா, அனந்த்நாக் மற்றும் புல்வாமா ஆகிய இடங்களில் நடந்த போராட்டங்களில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.

ஐநா சபை கண்டனம்

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் தொடங்கிய சில மணி நேரங்களில் 15 நாடுகளை உள்ளடக்கிய ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஐநா பொதுசெயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், “ பஹ்ரைன், ஈரான், ஜோர்டான், குவைத், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சின் இறையாண்மை மற்றும் பிாந்திய ஒருமைப்பாட்டை மீறும் ஈரானின் தாக்குதல்களும், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்திய ராணுவ தாக்குதல்களும் கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்தார்.

அமைதிக்கு பெரும் அச்சுறுத்தல்

சர்வதேச அமைதி, பாதுகாப்புக்கு தற்போது கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது உலகின் மிக கொந்தளிப்பான பிராந்தியத்தில் யாராலும் கட்டுப்படுத்த முடியாத சங்கிலி தொடர் நிகழ்வுகளை ஏற்படுத்தும் அபாயத்தை இந்த ராணுவ நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய கிழக்கு பகுதிக்கும், உலகிற்கும் இப்போது அமைதியான ஒரு வழி தேவை. பதற்றங்களை குறைத்து, விரோதபோக்கை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

======