AI 80s Retro Photo Trend Costs 150 Billion Liters Water in India Data Centers source:thamizhalai,ai generated
சிறப்புச் செய்திகள்

Trending-ல் AI 80's புகைப்படங்கள் : பின்னணியில் 15,000 கோடி லிட்டர் தண்ணீர் காலி செய்யும் தரவு மையங்கள்!

இன்ஸ்டாகிராம் AI 80's போட்டோ ட்ரெண்ட் பின்னணியில், இந்திய AI தரவு மையங்கள் 15,000 கோடி லிட்டர் தண்ணீரைச் செலவிட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

Kavitha prasanna

இன்ஸ்டாகிராமில் வைரலாகும் AI ரெட்ரோ ட்ரெண்ட்

கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் '80s Retro Style' AI புகைப்படங்களை உருவாக்கும் ட்ரெண்ட் மிகவும் பிரபலமடைந்து வருகிறது.

1980 கிளாசிக் புகைப்படங்கள்

பயனர்கள் தங்களது சாதாரண படங்களை 1980-களின் கிளாசிக் சினிமேடிக் ஸ்டைலில் மாற்றி இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். ஆனால், இந்த ஃபேன்டசி படங்களுக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்த தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

AI தரவு மையங்களின் பிரம்மாண்ட தண்ணீர் பயன்பாடு

AI நுட்பம் மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் தரவுகளைச் செயல்படுத்த மிகப்பெரிய டேட்டா சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த உயர்தொழில்நுட்பச் சேவையகங்கள் தொடர்ந்து இயங்கும்போது வெளிப்படும் கடும் வெப்பத்தைத் தணிக்க பிரம்மாண்டமான குளிரூட்டும் அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்காக நாள்தோறும் கோடிக்கணக்கான லிட்டர் நன்னீர் ஆவியாக்கும் முறை மூலம் செலவிடப்படுகிறது.

இந்தியாவில் 15,000 கோடி லிட்டர் நீர் இழப்பு

சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆதார ஆய்வறிக்கைகளின்படி (CEEW), இந்தியாவில் இயங்கி வரும் AI தரவு மையங்கள் மட்டும் 2025-ஆம் ஆண்டில் சுமார் 150 பில்லியன் லிட்டர் அதாவது 15,000 கோடி லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தியுள்ளன என்பது தெரியவந்துள்ளது.

2030-ஆம் ஆண்டிற்குள் இந்தத் தண்ணீரின் தேவை மேலும் இரு மடங்காக அதிகரித்து 358 பில்லியன் லிட்டராக உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கவலை

சென்னையைக் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் நிலத்தடி நீர் சீர்கேடு அச்சுறுத்தி வரும் சூழலில், பொழுதுபோக்கிற்காக நாம் உருவாக்கும் ஒரு சிறிய AI புகைப்படத்திற்குப் பின்னாலும், AI - யிடம் கேட்கப்படும் வினாக்களுக்குப் பின்னாலும் பெருமளவு நன்னீர் விரயமாகிறது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, AI தொழில்நுட்ப உருவாக்கத்தில் மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் மற்றும் மாற்று குளிரூட்டும் முறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

=====