இந்தியாவில் கோடைக்காலம்
பொதுவாக இந்தியாவில் கோடை காலம் என்பது ஏப்ரலில் தொடங்கி ஜூன் மாதம் வரை நீடிக்கும். பருவமழை தீவிரம் பெற்றதும், வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும்.
மனிதர்களுக்கு புதிய அச்சுறுத்தல்
கோடையில் கடுமையான வெப்பம் என்பது உச்சபட்ச வெயில், வெப்ப அலைகளின் தீவிரத்தை கொண்டு அமையும். ஆனால், இப்போது புதிய ஆபத்தாக உருவெடுத்து இருப்பது கோடை வெப்பம் கிடையாது, இரவில் நீடிக்கும் வெப்பத்தின் தீவிரம் தான்.
வெப்பமான இரவுகள் நடுத்தர மக்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு அதிக சுகாதார அபாயத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
இந்தியாவில் அதிகரிக்கும் வெப்பநிலை
இந்தியாவை பொருத்துவரை பகல் மற்றும் இரவு நேர சராசரி வெப்பநிலைகள் இரண்டுமே அதிகரித்து வருகின்றன, ஆனால் சமீபத்திய தரவுகள் இரவு நேர வெப்பநிலை வேகமான விகிதத்தில் அதிகரித்து வருவதைக் காட்டுகின்றன.
பொது சுகாதாரத்திற்கு பாதிப்பு
பகல் நேரத்தில் வெளியில் ஏற்படும் வெப்பத்தை விட, இரவு நேரத்தில் வீட்டிற்குள் ஏற்படும் வெப்ப பாதிப்பு பொது சுகாதாரத்திற்குப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பொதுமக்களுக்கு நேரடி பாதிப்பு
குளிர்ச்சியான மாலையும் இரவும், பகல் நேரத்தில் மனித உடல் அனுபவித்த வெப்பத்திலிருந்து மீள்வதற்கு அனுமதிக்கின்றன. ஆனால் இரவு வெப்பநிலையும் அதிகமானால் பகல்நேர பாதிப்பில் இருந்து உடலால் மீள முடிவதில்லை.
இடைவெளியின்றி நீடிக்கும் வெப்பம், சிறிய இடங்களில் முடங்கிக் கிடப்போர், இயற்கை காற்றோட்டம் இல்லாத, ஏசி வசதி இல்லாத வீடுகளில் வசிப்போரின் நிலையை மோசமாக்குகிறது.
இரவிலும் 32 டிகிரி செல்ஷியஸ்
டெல்லியை சேர்ந்த காலநிலை ஆராய்ச்சி அமைப்பான 'கிளைமேட் ட்ரெண்ட்ஸ்', “சென்னையில் உள்ள நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் கொண்ட 50 வீடுகளில் சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில், அங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் 32° செல்சியஸ்க்கும் அதிகமான வெப்பநிலையில்தான் தூங்குவது தெரியவந்துள்ளது.
வெப்பம் சார்ந்த மரணங்கள்
சில சமயங்களில், இரவு நேர வெப்பநிலை 35° செல்சியஸைத் தாண்டுகிறது, இது பகல் நேர உச்சக்கட்ட வெப்பநிலைக்கு இணையானது. இரவு நேர வெப்பம் தொடர்பாக தொடர் ஆராய்ச்சிகள் நடத்தப்படா விட்டாலும், இந்த வெப்பமயமாதல் வெப்பம் சார்ந்த மரணங்களுக்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
படிப்படியாக அதிகரிக்கும் வெப்பம்
இந்திய பகுதிகளில் 1901ம் ஆண்டு மற்றும் 2018க்கு இடையில் இந்தியாவின் சராசரி வெப்பநிலை 0.7° செல்சியஸ் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலைகள் இரண்டுமே அதிகரித்துள்ளன, ஆனால் அவை வெவ்வேறு விகிதங்களில் உயர்ந்துள்ளன.
1986 மற்றும் 2015 க்கு இடைப்பட்ட 30 ஆண்டுகளில், ஆண்டின் வெப்பமான நாளின் வெப்பநிலை சுமார் 0.63° செல்சியஸ் அதிகரித்தது, அதே நேரத்தில் குளிர்ந்த இரவின் வெப்பநிலை 0.4° செல்சியஸ் மட்டுமே அதிகரித்தது.
பகல், இரவு வெப்பம் அதிகரிக்கும்
இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் ஆண்டின் வெப்பமான நாளின் வெப்பநிலை 4.7° செல்சியஸ் உயரக்கூடும், அதே நேரத்தில் குளிர்ந்த இரவின் வெப்பநிலை 5.5° செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும்.
===================