சூப்பர்-இண்டெலிஜன்ஸ் அச்சுறுத்தல்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியால் மனிதகுலத்திற்குப் பேராபத்து ஏற்படும் என்று எச்சரித்து, முன்னணி AI நிறுவனமான Anthropic-ன் மூத்த ஆய்வாளர் ஜேக்கப் காக்சன் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.
மனிதகுலத்தின் உயிரோடு விளையாடுகின்றன
OpenAI மற்றும் Anthropic ஆகிய இரு முன்னணி நிறுவனங்களிலும் கடந்த 3 ஆண்டுகளாகப் பணியாற்றிய இவர், "இரண்டு நிறுவனங்களும் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு, மனிதகுலத்தின் உயிரோடு விளையாடுகின்றன" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் எச்சரிக்கை பதிவு
தனது ராஜினாமா குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் விரிவான பதிவை வெளியிட்டுள்ள ஜேக்கப் காக்சன், "AI தொழில்நுட்ப நிறுவனங்கள் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி சுய-முன்னேற்றமடையும் சூப்பர்-இண்டெலிஜன்ஸ் அமைப்புகளை உருவாக்கப் போட்டிபோடுகின்றன.
மனித இனத்திற்கே பேரழிவை உருவாக்கக்கூடும்
மனிதர்களை விட அதிகத் திறன் கொண்ட இந்த அமைப்புகள் எதையும் ஹேக் செய்யும் ஆற்றலையும், குறுகிய காலத்தில் எந்தவொரு துறையையும் மாற்றியமைக்கும் சக்தியையும் பெறும்" என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 2030-க்குள் AI அமைப்புகள் மனித இனத்திற்கே பேரழிவை உருவாக்கக்கூடும் என்றும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
Anthropic நிறுவனத்தின் ஒப்புதல்
ஜேக்கப் காக்சனின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, Anthropic நிறுவனத்தின் அலைன்மென்ட் பிளான் குழுவின் முதன்மை அதிகாரியான ஈவன் ஹுபிங்கர் (Evan Hubinger) இதற்கு ஆதரவாகப் கருத்து தெரிவித்துள்ளார்.
"அடுத்த 10 ஆண்டுகளுக்குள் AI தொழில் நுட்பத்தால் மனித குலத்திற்கு ஆபத்து ஏற்படும் சாத்தியக்கூறு 10%க்கும் அதிகமாக உள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்ட அவர், சூப்பர்-இண்டெலிஜன்ஸ் அமைப்புகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான தீர்வுகள் இன்னும் கைவசம் இல்லை என்பதையும் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டுள்ளார்.
சர்வதேசக் கட்டுப்பாடுகளுக்கு கோரிக்கை
தனியார் நிறுவனங்களின் உள்வட்ட விவாதங்களில் நிலவும் இந்த அச்சங்களை வெளிப்படுத்திய ஜேக்கப் காக்சன், அரசுகளின் தலையீடு மற்றும் சர்வதேச அளவிலான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் மூலம் மட்டுமே AI தொழில்நுட்பத்தின் ஆபத்தான வேகத்தைத் தடுக்க முடியும் என வலியுறுத்தியுள்ளார்.
உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இச் சம்பவம், AI தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் குறித்த விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : உலக அளவில் UPI சேவையை மேலும் விரிவுபடுத்த வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்!
======