Student Admissions Intensify in Tamil Nadu's Arts and Science Colleges: Interest in Cyber ​​Security and AI Courses! source: google
சிறப்புச் செய்திகள்

கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம் : சைபர் செக்யூரிட்டி, ஏஐ பாடப்பிரிவுகளுக்கு குவியும் ஆர்வம்!

உலகச் சூழலில் நெட்வொர்க் பாதுகாப்பு, சைபர் தாக்குதல்கள் மற்றும் தரவு கசிவுகள் போன்றவை உலகளாவிய பெரும் சவால்களாக உருவெடுத்துள்ளன.

Kavitha prasanna

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, உயர்கல்விக்கான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவ, மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்பப் பாடப்பிரிவுகளில் ஆர்வம்

இந்த கல்வி ஆண்டில், வழக்கமாகத் தேர்ந்தெடுக்கப்படும் பாரம்பரியப் பாடப்பிரிவுகளுடன் சேர்த்து, வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பப் பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பதில் மாணவர்கள் தீவிர ஆர்வம் காட்டி வருவதாகக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் முதல்வர் முனைவர் அப்துல் காதர் சில முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மாணவர்கள் தங்களின் மேற்படிப்பைத் திட்டமிடப் பத்து நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம், மே முதல் வாரத்திலேயே பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவுகளும் தொடங்கிவிட்டன.

கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்கு நீடிக்கும் மவுசு

ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் முதல் தேர்வாக இருக்கும் பி.காம் மற்றும் கணினி அறிவியல் போன்ற பாடப்பிரிவுகள் இந்த ஆண்டும் தங்களது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளன. இதனுடன் மைக்ரோபயாலஜி பாடப்பிரிவுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

குறிப்பாக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அடிப்படை அறிவியல் பிரிவுகளில் ஒன்றான ‘கணிதம்’ பாடப்பிரிவை மாணவர்கள் இந்த ஆண்டு அதிக அளவில் தேர்ந்தெடுத்து வருவது ஒரு ஆரோக்கியமான மற்றும் முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.

புதிய தொழில்நுட்பப் பிரிவுகளின் எழுச்சி

தற்போதைய காலகட்டத்தில் கணினி அறிவியல் துறைக்கு இணையாகப் புதிய தொழில்நுட்பப் பாடப்பிரிவுகள் அதிவேகமாக உருவெடுத்துள்ளன.

குறிப்பாக, பி.எஸ்.சி செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல், சைபர் செக்யூரிட்டி, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் மெஷின் லேர்னிங் போன்ற நவீன காலப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

வேலைவாய்ப்புகளும் ஆரம்ப கால ஊதியமும்

இன்றைய டிஜிட்டல் உலகச் சூழலில் நெட்வொர்க் பாதுகாப்பு, சைபர் தாக்குதல்கள் மற்றும் தரவு கசிவுகள் போன்றவை உலகளாவிய பெரும் சவால்களாக உருவெடுத்துள்ளன.

இதன் காரணமாக, ‘சைபர் செக்யூரிட்டி’ துறையில் தகுதிபெறும் மாணவர்களுக்குப் முன்னணி ஐடி நிறுவனங்கள், அரசுத் துறைகள், நிதி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொலைத்தொடர்புத் துறைகளில் வேலைவாய்ப்புகள் பலமடங்கு அதிகரித்துள்ளன.

3 - 6 லட்சம் வரை ஊதியம்

மேலும், இப்பிரிவுகளில் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு ஆரம்பக்கால ஊதியமாக ஆண்டிற்குச் சுமார் 3 லட்சம் ரூபாய் முதல் 6 லட்சம் ரூபாய் வரை கிடைப்பதும் மாணவர்களின் இந்த ஆர்வத்திற்குக் கூடுதல் காரணமாக அமைந்துள்ளது.

நவீன காலத் தொழில்முறை மாற்றங்களுக்கு ஏற்ப, மாணவர்கள் தங்களை இப்படிப்பட்ட புதிய தொழில்நுட்பப் பாடப்பிரிவுகளில் இணைத்துக் கொள்வது கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள ஒரு முற்போக்கான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.