Aani Thirumanjanam 2026: The Glory and Spiritual Benefits of Lord Nataraja’s Maha Abhishekam! source:Ai generated
ஆன்மிகம்

ஆனி திருமஞ்சனம் 2026 : நடராஜ பெருமானின் மகா அபிஷேக மகிமையும், ஆன்மிக பலன்களும்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன மகா அபிஷேகத் திருவிழா ஜூன் 19 முதல் ஜூன் 28 வரை நடைபெறுகிறது.

Kavitha prasanna

நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

சைவ சமய வழிபாட்டில் ஆடலரசன் நடராஜ பெருமானுக்கு வருடத்திற்கு ஆறு முறை மட்டுமே சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகக் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில், தேவர்களின் பிரம்ம முகூர்த்த வேளையான மார்கழி மாதமும், சந்தியா காலமான மாலைப்பொழுதில் ஆனி மாதமும் இறை வழிபாட்டிற்குரிய மிக உன்னதமான காலங்களாகும்.

இந்த இரு மாதங்களில் நடராஜருக்கு நடத்தப்படும் மகா அபிஷேகங்களைத் தரிசிப்பது, நம் பிறவி பாவங்களைப் போக்கி அளப்பரிய புண்ணியத்தைத் தரும் என்பது ஐதீகம்.

ஆனித் திருமஞ்சனத்தின் பின்னணி மற்றும் முக்கியத்துவம்

ஈசனின் திருநட்சத்திரமான திருவாதிரை மிகவும் உஷ்ணமானது. மேலும், ஆலகால விஷத்தை உண்டவர், அக்னியை கையில் ஏந்தியவர் என்பதால், எப்போதும் உஷ்ண வடிவாக இருக்கும் ஈசனை ஆகம விதிகளின்படி குளிரச் செய்வதே இந்த வழிபாட்டின் நோக்கமாகும். இதனாலேயே சிவபெருமான் 'அபிஷேகப் பிரியன்' என்று அழைக்கப்படுகிறார்.

ஆனி மாத உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் ஆடலரசனுக்குப் பூஜைகள் செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்நன்னாளே ஆனித் திருமஞ்சனமாகப் போற்றப்படுகிறது.

மகா அபிஷேகம்

பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான குளிர்ந்த வாசனைப் பொருட்களைக் கொண்டு இந்த மகா அபிஷேகம் நடத்தப்படுகிறது.

ஜோதிட ரீதியாக, சாதாரண நீராடலுக்குச் சந்திரன் காரகராக இருந்தாலும், பல வாசனைப் பொருட்களுடன் செய்யப்படும் இந்த மங்கள நீராட்டிற்கு அதாவது திருமஞ்சனத்திற்கு சுக்கிரனே காரகராவார். இத்திருவிழாவை முதன்முதலில் தொடங்கி வைத்தவர் பதஞ்சலி மகரிஷி ஆவார்.

சிதம்பர ரகசியமும் ஆனந்தத் தாண்டவமும்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசனத்தைப் போலவே, ஆனித் திருமஞ்சனத் திருவிழாவும் 10 நாட்கள் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

இவ்வாண்டு இவ்விழா ஜூன் 19 முதல் ஜூன் 28 வரை நடைபெறுகிறது. நாட்டின் விவசாயம் சிறக்கவும், நல்ல மழை பெய்யவும் இவ்விழா நடத்தப்படுகிறது.

சிதம்பரத்தில் ஆடும் ஆனந்தத் தாண்டவம் என்பது படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களை உணர்த்துகிறது.

நடராஜப் பெருமானின் ரகசியங்கள்

நடராஜரின் வலப்பக்கத்தில் 'சிதம்பர ரகசியமும்', திருவாரூரில் தியாகராஜர் திருமேனி ரகசியமும் அமைந்துள்ளன. ஆனித் திருமஞ்சனத்தன்று ஸ்ரீநடராஜரும், அன்னை சிவகாமியும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளுவர்.

அங்கு அவர்களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்ற பின், இருவரும் பக்தர்களுக்குக் காட்சி அளித்து ஆனந்த நடனம் புரிந்தபடியே சித்சபைக்குள் எழுந்தருள்வது கண்கொள்ளாக் காட்சியாகும்.

தரிசிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்

  • ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் குடும்பத்தில் பல்வேறு நன்மைகள் உண்டாகும்.

  • பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியமும், கன்னிப் பெண்களுக்குத் தகுந்த வரனுடன் கூடிய நல்ல திருமண வாழ்வும் அமையும்.

  • தம்பதியருக்கு மனக்கசப்புகள் நீங்கி, மகிழ்ச்சியான மற்றும் சுகமான குடும்ப வாழ்க்கை கிட்டும்.

  • ஆண்களுக்கு வாழ்வில் எதையும் எதிர்கொள்ளும் மனதைரியமும், உடல் பலமும், செல்வ வளமும் பெருகும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

====