Aavani Festival begins at Thiruchendur Murugan Temple with the flag-hoisting ceremony!
ஆவணித் திருவிழா தொடக்கம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புகழ்பெற்ற ஆவணித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக செப்டம்பர் 9-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
கொடியேற்றம் மற்றும் பக்திப் பரவசம்
நேற்று மாலை வடக்கு ரதவீதியில் உள்ள 12-ம் திருவிழா மண்டபத்தில் கொடிப்பட்டத்திற்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, யானை மீது வைத்து வீதி உலா நடத்தப்பட்டது. தொடர்ந்து, இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
"அரோகரா... அரோகரா..." பக்தி முழக்கம்
பின்னர், காலை 5:15 மணியளவில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் "அரோகரா... அரோகரா..." என பக்தி முழக்கங்களை பரவசத்துடன் எழுப்பினர்.
முதல் நாள் நிகழ்வுகள்
திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை, அப்பர் சுவாமிகள் கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் வீதி உலா தொடங்கி உழவாரப் பணி நடைபெற உள்ளது.
இரவில் ஸ்ரீபலி நாயகர் அஸ்திர தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் வீதி உலா வருகிறார்.
முக்கியத் திருவிழா நிகழ்வுகள்
செப்டம்பர் 4 (இரவு 7:30 மணி): சுவாமியும் அம்பாளும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதியுலா நிகழ்வு நடைபெறும்.
செப்டம்பர் 5: காலையில் கோ ரதத்திலும், இரவில் வெள்ளி ரதத்திலும் சுவாமி வீதியுலா வருவர்
செப்டம்பர் 9 (காலை 7 மணி): சிகர நிகழ்வான ஆவணித் திருவிழா தேரோட்டம் நடைபெறும்.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஆவணித் திருவிழாவை முன்னிட்டுப் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
======