ஐயப்ப கோவில் நடைதிறப்பு
Kerala High Court on Sabarimala Ayyappa Temple Crowd : கேரளாவின் சபரிமலையில் உள்ள ஐய்யப்பன் கோவில் மண்டல பூஜை கடந்த 17ல் துவங்கியது. இதையொட்டி, 16ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதலே ஏராளமான ஐய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு படையெடுக்க துவங்கினர். இதனால், பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
2 லட்சம் பக்தர்கள் தரிசனம்
மேலும்,மலைப்பாதையில் கூட்டம் முண்டியடித்து சென்றதால், குழந்தைகளுடன் சென்றவர்கள் முன்னேறி செல்ல முடியாமல் திணறினர். பதினெட்டாம் படியிலும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தனர். நடை திறக்கப்பட்ட, 48 மணி நேரத்தில், இரண்டு லட்சம் பக்தர்கள் ஐய்யப்பனை தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.
பக்தர்கள் அவதிக்குள்ளாகிறார்கள்
பக்தர்கள் வருகையால் சபரிமலை செல்வதற்கு முன்பே பந்தளம் மற்றும் எரிமேலி வழிகளிலே கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசல் ஏற்பட்டு நிலையில்லாமல் சபரிமலை சென்ற பக்தர்கள் அடிப்படை வசதி கூட கிடைக்காமல் அவதிப்படுவதாகவும் சபரிமலை செல்லும் பக்தரகள் மற்றும் கேரள எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இந்நிலையில், 'சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்?' என, கேரள உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கூறியதாவது:
முன்பே ஏற்பாடு செய்து இருந்தால் தவிர்த்து இருக்கலாம்
சபரிமலையில் மண்டல பூஜை துவங்கியது முதலே கூட்ட நெரிசல் அதிகரித்து வருவதை காணமுடிகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு(Travancore Devaswom Board - TDB) முன்பே செய்யாதது ஏன்?
ஆறு மாதங்களுக்கு முன்பே, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்திருந்தால் கூட்ட நெரிசலை தவிர்த்திருக்கலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
நீதிமன்றம் அறிவுறுத்தல்
இதற்கு, தேவசம் போர்டின் அதிகாரிகளிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம். பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்வது குறித்து, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை தேவசம் போர்டு ஏன் பின்பற்றவில்லை.
ஒரே நேரத்தில் அதிகப்படியான பக்தர்களை மலையேற அனுமதித்தது ஏன்? ஒரே இடத்தில் பக்தர்களை தேக்கி வைப்பது ஆபத்தானது. எனவே, நெரிசலைக் கட்டுப்படுத்த அவர்களை சிறிய குழுக்களாக பிரித்து அனுப்ப வேண்டும். இவ்வாறு நீதிமன்றம் கூறியுள்ளது.
நடவடிக்கை எடுக்கப்படும் என பதில்
கேரள உயர் நீதிமன்றத்தின் கவலையை கருத்தில் கொள்வதாகவும், உரிய ஏற்பாடுகளை தேவசம் போர்டு செய்யும் என்றும் புதிதாக நியமிக்கப்பட்ட திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நெரிசலை சமாளிக்க அரக்கோணத்தில் இருந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நேற்று சபரிமலைக்கு விரைந்தனர். இதற்கிடையே கூட்ட நெரிசலால், பகத்ர்கள் சபரிமலை செல்லாமல் கீழே உள்ள ஐயப்பனை தரிசித்து பயணத்தை நிறைவு செய்கின்றனர்.
மேலும் இந்த கூட்ட நெரிசலால், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.