மகாசிவராத்தியின் மகிமை
Maha Shivaratri 2026 Viratham in Tamil : மகாசிவராத்திரி என்றால் என்ன, சிவராத்திரியின் வகைகள்,விரத முறைகள் என்ன,அன்றைய நாள் என்னென்ன அபிஷேகம் செய்ய வேண்டும் என அனைத்தையும் ஒவ்வொன்றாக தெரிந்து கொண்டோம்.
சரி மகாசிவராத்திரியின் போது விரதம் இருந்தால் மட்டும் தான் பலன் கிடைக்குமா என்றால் அதுதான் இல்லை. எளிமையான சில விஷயங்களை கடைபிடித்தாலே சிவனின் அருளைப் பெறலாம் என சித்தர்கள் கூறியுள்ளனர்.
யோக நிலை
மகாசிவராத்திரி சிவ வழிபாட்டிற்கான நாள் மட்டுமன்று அண்டசராசரத்தின் சக்தியும் பிண்டத்தின் சக்தியும் அதாவது மனித உடலின் சக்தியும் இணையும் ஒருவகை யோக நிலை என்கின்றனர் சித்தர்கள்.
அண்டம் / பிண்டம்
அண்டம் என்பது இந்த பிரபஞ்சம். பிண்டம் என்பது மனித உடல். மகா சிவராத்திரியின் போது அண்ட சராசரத்தின் சக்தியானது உயர்ந்து, நம் உடலுக்குள் மையம் கொள்ளுமாம்.
இதற்காகத்தான் நாம் சிவராத்திரியின் போது தியானம் முதலான செயல்களில் ஈடுபடுவதும், மனதை ஒருநிலைப்படுத்துவதும்.
இறைவனை உணரும் வழி
சிவனும் கூட தியானத்தைப் போற்றுபவர் தான். ஏனென்றால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தவப்பயனின் மூலமாக சிவபெருமான் அமைதி நிலையை அடைந்த நாள் தான் சிவராத்திரி என்று சொல்லப்படுகிறது.
தியானத்தின் மூலமாகத்தான் இறைநிலையை உணரமுடியும். அதனால் தான் சிவராத்திரியின் போது தியானம் செய்தால் இறைவனை உணர முடியும் என்கின்றனர்.
நான் என்ற அகந்தை
இப்படி தியானம் செய்து இறைவனை உணரும் நேரம் தான் 'சதா சிவ தரிசன நேரம்' என்று சொல்லப்படுகிறது.
’நான்’ என்ற அகந்தையை இழந்தால் தான் இந்த சதாசிவ தரிசனத்தைக் காண முடியும் என்றும் ’நான்’ என்கிற அகந்தையை அழித்து, நம்மை நாமே பிரம்மமாய் உணர்வதே உண்மையான ஞான வழி என்கின்றனர் சித்தர்கள்.
சித்தர்கள் சொல்லும் தத்துவ நிலை
"ஆதியும் அவனே, அந்தமும் அவனே" என்ற தத்துவ நிலையை உணர்த்துவது தான் சிவராத்திரி. மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி அன்று சந்திரன் முழுவதுமாக தேய்ந்திருக்கும்.
இந்த நிலையே ஆதியும், அந்தமும் சிவன் என்பதை உணர்த்துவதாக சித்தர்கள் கூறுகின்றனர்.
ஏன் சிவராத்திரியன்று தூங்காமல் இருக்க வேண்டும்
ஏன் சிவராத்திரியன்று தூங்காமல் இருக்க வேண்டும் தெரியுமா? பூமியின் வடதுருவ ஆற்றலானது அன்றைய தினம் மேல்நோக்கிப் பாயும்.
ஒவ்வொருமுறை நீங்கள் மூச்சை உள்வாங்கும் போது அண்டத்தின் ஆற்றல் சக்தி உங்கள் உடலின் மூலாதாரத்தில் இருந்து சஹஸ்ராமம் அதாவது உச்சிக்கு ஏறுவதாகக் கற்பனை செய்ய வேண்டும்.
இந்த நிலை உங்களை குண்டலினி சக்தியை பெறுவதற்கு துணை புரியும். சித்தர்கள் குண்டலியினி சக்தியைத்தான் முதன்மைப்படுத்துவர்.
குண்டலினி சக்தியை எழுப்ப
குண்டலினி சக்தியானது முதுகெலும்பின் கடைசிப் பகுதியான மூலாதார சக்கரத்தில் சக்தியற்ற நிலையில் தான் இருக்கும்.
இதனை செயல்படுத்த முறையான பயிற்சியுடன் குண்டலினி யோகா செய்து அதாவது முறையான சுவாசப் பயிற்சி, தியான பயிற்சி மூலம் விழிப்படைய செய்ய வேண்டும்.
குண்டலினி சக்தியின் ஆற்றல்
மன அமைதி, உடல் ஆரோக்கியம், மனச்சோர்வு குறைதல், ஆன்மிக பற்றுதல் முதலானவற்றைப் பெற உதவுகிறது.
ருத்ராட்ச சக்தி
சிவன், தியானம் என்றால் நினைவுக்கு வருவது ருட்ராட்சம் தான். நீங்கள் தியானம் செய்ய போகிறீர்கள் என்றால் கட்டாயமாக ருத்ராட்சத்தின் துணையும் வேண்டும்.
தியானத்தின் போது உங்கள் கையில் ஐந்து முக ருட்ராட்சத்தினை இறுக்கமாக மூடிக்கொண்டு சிவ நாமங்களை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
நீங்கள் சோர்வடையும் போது உங்கள் உடலின் ஆற்றலை உங்களுக்குள் கடத்தும் ஆற்றலைக் கொண்டது ருத்ராட்சம்.
சிவனருள் கிடைக்க
மாகாசிவராத்திரி பற்றி சித்தர்கள் கூறுவது ஒன்றுதான். மனதை ஒருநிலை படுத்துதல், இறைவனை முழுமையாக நினைத்து வழிபடுதல், அண்டத்தின் ஆற்றலை மூச்சுப் பயிற்சியின் மூலம் உடலுக்குள் கடத்துதல்.
நான் என்ற அகந்தையை இழத்தல். இவற்றை உணர்ந்து இறைவனை நோக்கி தியானித்தாலே போதும் சிவ பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் உண்மையான பக்தியும் உறுதியான நம்பிக்கையும் இருந்தால் சிவனோடு ஐக்கியமாகலாம் என்கின்றனர்.
முறையான மூச்சுப்பயிற்சி
முறையான மூச்சுப்பயிற்சி இல்லாமல் குண்டலினி யோகா செய்ய முயற்சிக்கக் கூடாது. இதனை கவனத்தில் வத்துக்கொள்ளவும்.
மூச்சுப்பயிற்சி தெரியாதவர்கள் கண்களை மூடி முழுமனதோடு சிவனை மட்டுமே நினைத்து மனதார தியானித்து இறை ஆசியைப் பெறலாம்.