பெண்மையை போற்றும் நவராத்திரி :
நவராத்திரி என்றால் கோலாகலம், கொண்டாட்டம் தான் நினைவுக்கு வரும். தமிழகத்தில் முக்கிய விழாக்களில் ஒன்று நவராத்திரி. ஒன்பது இரவுகள், பத்து பகல்களை கொண்ட பெண்மையைப் போற்றும் பண்டிகை. இதில் வணங்கப்படும் தெய்வங்கள் துர்கை, லட்சுமி, சரஸ்வதி எனப்படும் முப்பெரும் தேவியர் ஆவர். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று சக்திகளை வணங்கி அவர்களின் அருளைப் பெறுவதே இந்த பண்டிகையின் நோக்கம். நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பதுதான் அர்த்தம்.
உலகமே சக்தி மயம் - நவராத்திரி :
உலகமே சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தாத்பரியம். வீட்டில் பொம்மைகளை அடுக்கி கொலு வைத்து, பூஜை செய்து, அக்கம்பக்கத்து பெண்களை அழைத்து தாம்பூலம் கொடுப்பது வழக்கம். தீமையை அழித்து, நன்மை வென்றதை கொண்டாடும் பண்டிகைதான் இது. புரட்டாசி அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை முதல் நவமி வரை வரும் ஒன்பது நாட்கள் தான் நவராத்திரி.
முப்பெரும் தேவியர் வழிபாடு :
துர்கை, மகாலட்சுமி, சரஸ்வதிக்கு வழிபாடு செய்யப்படுகிறது. ஒன்பதாம் நாளான நவமி திதியன்று கல்விக் கடவுளான சரஸ்வதிக்கு பூஜை செய்யப்படுகிறது. இதை ஆயுத பூஜை என்றும் சொல்வார்கள்.
நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்கையை ஆராதிப்பதால் உடலுக்கு நல்ல ஆரோக்கியமும் மனதிற்கு தைரியமும் கிடைக்கிறது. இரண்டாவது மூன்று நாட்கள் மகாலட்சுமியை ஆராதிப்பதால் குடும்பத்தில் கணவன், மனைவியிடையே அன்யோன்னியம் அதிகரித்து சுபிட்சம் கிடைக்கிறது. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியை ஆராதிக்கும்போது கல்விச் செல்வம் வளருகிறது.
நவராத்திரி வழிபாடு எப்படி செய்வது? :
தேவியின் விழியை முதல் நாள் திறக்கும்போது (மையிட்டு) பக்கத்தில் சர்க்கரைப் பொங்கல் பிரசாதத்தை வைத்துக் கொண்டுதான் திறக்க வேண்டும். மிக நீண்ட நாட்கள் கழித்துக் கண் விழிக்கும்போது தேவி அகோர பசியிலிருப்பாள். தினமுமே ஐந்து வேளை நைவேத்தியம் சமர்ப்பிக்க வேண்டும். தினமும் பூஜைகள் முடிந்ததும் வீட்டுக்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், புஷ்பம், வெற்றிலைப் பாக்கு, பழம், தேங்காய், ரவிக்கைத் துணி போன்ற மங்கலப் பொருட்களை வழங்குவது நல்லது, எல்லா வளங்களையும் கொண்டு வந்து சேர்க்கும்.
==============================