சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்
Sabarimala Ayyappan Thanga Angi 2025 : உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், கடந்த மாதம் 17ம் தேதி மண்டல பூஜைகள் தொடங்கின. ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்த 70 ஆயிரம் பக்தர்கள், நேரடியாக 20 பக்தர்கள் தினமும் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.
மண்டல பூஜைகள் நிறைவு
கார்த்திகை ஒன்று முதல் தொடர்ச்சியாக 41 நாட்கள் மண்டல பூஜை நடத்தப்பட்டு, இன்று இரவுடன் நிறைவு பெறுகிறது. ஆரன்முளா கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட தங்க அங்கி நேற்று மாலை சபரிமலை அடைந்தது. பின்னர் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, சிறப்பு ஆராதனை காட்டப்பட்டது.
திருவிதாங்கூர் மன்னர் வழங்கிய தங்க அங்கி
மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா காணிக்கையாக வழங்கிய தங்க அங்கி(Ayyappan Thanga Angi) ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது. தங்க அங்கியை தந்திரி மற்றும் மேல் சாந்தி ஆகியோர் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவித்தனர்
பக்தர்கள் பரவசம்
பல்லாயிர கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அங்கி அணிவிக்கப்பட்ட ஐயப்ப சுவாமியை வணங்கி பரவசம் அடைந்தனர். இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, நெய்யபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.
மண்டல பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயிலில் 37 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்றிரவு நடை அடைப்பு
காலை 10:10 முதல் 11:30 மணிக்குள் தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை(Ayyappan Thanga Angi Date and Time) நடத்தப்பட்டது. தொடர்ந்து ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்டு, பின்னர் . மதியம் 3:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு பூஜைகளுக்கு பின்னர் இரவு 11:00 மணிக்கு அடைக்கப்படும்.
மகர விளக்கு பூஜை
அதன்பிறகு மகர விளக்கு காலத்திற்கான ஏற்பாடுகள் சன்னிதியில் தொடங்கும். வரும் 30ம் தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் மேற்கொள்ளப்படும்.
ஜனவரி 14ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெறும். மண்டல பூஜையின் கடைசி நாளான இன்று வரை சுமார் 30 லட்சம் பக்தர்கள் ஐயப்பனை வழிபட்டு இருக்கிறார்கள்.
===================