Tiruvannamalai Karthigai Deepam 2025 Devotees flock to Maha Deepam - Tiruvannamalai despite the rain! Google
ஆன்மிகம்

மழைக்கு இடையிலும் மகா தீபம் : திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்!

Tiruvannamalai Karthigai Deepam 2025 : திருவண்ணாமலையில் திருக்கார்த்திகையன்று 2 ஆயிரத்து 668 அடி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றபடவுள்ளது. காலை முதலே திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.

Baala Murugan

திருவண்ணாமலை மகாதீபம்

Tiruvannamalai Karthigai Deepam 2025 : திருவண்ணாமலை தீபம், கார்த்திகை தீபம் என்றதும் பக்தர்களின் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை மகா தீபம்தான். நினைத்தாலே முக்தி தரும் அற்புத தலம் எனும் சிறப்பு பெற்ற திருவண்ணாமலையில், திருக்கார்த்திகையன்று 2 ஆயிரத்து 668 அடி மலை உச்சியில் ஏற்றப்படுகிறது மகா தீபம்.

ஐந்தே முக்கால் அடி உயரமும் 300 கிலோ எடையும் கொண்ட கொப்பரையில், 3 ஆயிரத்து 500 லிட்டர் நெய் ஊற்றப்பட்டு, ஆயிரம் மீட்டர் காடா துணியால் ஆன திரியின் மூலம் இந்த மகாதீபம் ஏற்றப்படும்.

திருக்கார்த்திகை திருநாளுக்கு பல புராண கதைகள்

இதனைக் காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரள்வார்கள். திருவண்ணாமலையின் மீது ஏற்றப்படும் கார்த்திகை தீபம் குறித்து எழுதப்பட்ட வரலாறு ஏதும் இல்லை என்றாலும், திருக்கார்த்திகை திருநாள் பற்றி பல புராணக்கதைகள் கூறுகின்றன.

பஞ்சபூத தலங்களில் திருவண்ணாமலையே அக்னி தலம்

சிவபெருமான் ஜோதி வடிவில் மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் காட்சி அளித்த நாளே, திருக்கார்த்திகை திருநாள் எனப் பலராலும் போற்றப்படுகிறது. சிவபெருமான் அக்னி ஜோதியாக காட்சியளித்த இடமே திருவண்ணாமலை என புராணக்கதைகள் சொல்கின்றன.

ஆகையால், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது கார்த்திகை தீபத் திருநாள். சைவ சமய நம்பிக்கைகளின்படி பஞ்சபூத தலங்களில் திருவண்ணாமலை அக்னி தலமாகக் கருதப்படுகிறது.

அங்கு கார்த்திகை திருநாள் என்பது முக்கிய நாளாக இருந்ததை சில கல்வெட்டுகள் சுட்டிக்காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

6 தீபங்களும் அண்ணாமலையார் அருகில்

அண்ணாமலையார் கோயிலில் கிடைத்த முதலாம் ராஜேந்திரச் சோழனின் கிபி 1031ஆம் ஆண்டுக் கல்வெட்டு, கார்த்திகைத் திருநாளில் இறைவன் திருவேட்டைக்கு எழுந்தருளுவதைப் பற்றி கூறுகிறது.

மகா தீபத்திற்கு முன்பாக, கார்த்திகை தீப திருநாளன்று அதிகாலை அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது.

அந்த தீபத்தில் இருந்து மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றுவார்கள். பின்னர் அந்த தீபங்களை ஒன்றாக்கி, அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர்.

பரம்பொருளான சிவபெருமான் பல வடிவங்களாக இருக்கிறார், அவரே பரம்பொருள் என்ற ஒருவராகவும் உள்ளார் என்பதுதான் இதன் தத்துவம்.

பதினோரு நாட்கள் எரியும் மகாதீபம்

பின்னர் அண்ணாமலையார் அருகில் வைக்கப்பட்ட தீபம் மலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மகாதீபம் ஏற்படும். அதற்கு முன்னதாக, கோயில் மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

அந்த ஒருநாள் மட்டுமே அர்த்தநாரீஸ்வரர் தரிசனத்தை காண முடியும். கார்த்திகை திருநாளன்று திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்படும்

மகாதீபம் தொடர்ந்து பதினோரு நாட்கள் எரியும். மண்ணுலகில் இருந்து மலை உச்சியில் ஒளி வீசும் இந்த ஜோதியைக் கண்டு, அண்ணாமலையாரை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

இதுவே அண்ணாமலை மகாதீபத்தின் வரலாறாக பார்க்கப்டுகிறது, பல்வேறு புராணக் கதைைள் உள்ளநிலையில், தீப தரிசனத்தை நேரில் காண பக்தர்கள் கூட்டம் இன்றளவும் குவிந்து வருகிறது.

=====