டெபாசிட்ட செய்யப்படும் திருப்பதி தங்கம்
TTD Gold Value 2026 : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காணிக்கையாக பெறப்படும் தங்கத்தில் ஆன பொருட்களை, சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் மும்பையில் உள்ள மிண்டிற்கு கொண்டு சென்று உருக்கி சொக்கத்தங்கமாக மாற்றி அந்த தங்கக் கட்டிகளை வங்கிகளின் தங்க முதலீட்டு திட்டத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கடந்த பல ஆண்டுகளாக டெபாசிட் செய்து வருகிறது.
வட்டிக்கும் தங்கம் பெறும் தேவஸ்தானம்
அப்படி சேமிக்கப்பட்டு வரும் தங்கம் எவ்வளவு உள்ளது என்றும் தற்போது உயர்ந்து வரும் தங்கத்தின் விலையால் அதன் மதிப்பு எவ்வளவு உயர்ந்துள்ளது என்றும் தெரிந்து கொள்ளலாம்.
வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தங்கத்திற்கு கிடைக்கும் வட்டியையும் தேவஸ்தான நிர்வாகம் தங்கமாகவே வாங்கிக் கொள்கிறது.
திருப்பதியில் 15 டன் தங்கம்
இப்படி இதுவரை வங்கிகளில் தேவஸ்தானத்தின் கையிருப்பாக சுமார் 15 டன் தங்கம் சேர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
பல கோடிகள் உயர்ந்த திருப்பதி தேஸ்தான தங்கம்
கடந்த ஒரு ஆண்டு காலமாக படிப்படியாக அதிகரித்து வரும் தங்கத்தின் விலை உயர்வு காரணமாக தேவஸ்தானம் வங்கிகளில் டெபாசிட் செய்திருக்கும் தங்கத்தின் மதிப்பு கடந்த ஆண்டு துவக்கத்துடன் ஒப்பிடும்போது சுமார் 10,500 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்திருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
விலை மதிப்பிட முடியாத ஆபரணங்கள்
இது தவிர ஏழுமலையான் கோவில் உட்பட திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வரும் 60 கோவில்களிலும் ஏராளமான அளவில் சுவாமிகளுக்கு அலங்கரிக்க ஏராளமான திருவாபரணங்கள் உள்ளன. அவற்றின் மதிப்பும் தற்போதைய விலை உயர்வு காரணமாக வெகுவாக அதிகரித்துள்ளது.
தேவஸ்தானத்தில் பாதுகாக்கப்படும் ஏழுமலையான் கிரீடம்
மேலும் ஏழுமலையானுக்கு பண்டைய அரசர்கள், ஆங்கிலேயர்கள்,ஜமீன்தார்கள் ஆகியோர் உள்ளிட்ட பிரமுகர்கள் நன்கொடையாகவும் காணிக்கையாகவும் சமர்ப்பித்த மார்க்கெட் மதிப்பின்படி விலை மதிக்க இயலாத மிகப் பழமையான திருவாபரணங்கள் தேவஸ்தானத்தின் சொந்த கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
ஏழுமலையானுக்கு பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடைபெற்ற போது ஆகாச ராஜன் ஏழுமலையானுக்கு சமர்ப்பித்த தங்க கிரீடம் இப்போதும் தேவஸ்தானத்திடம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேவஸ்தான நிர்வாகம் தன்னிடம் இருக்கும் மிக பழமையான திருவாபரணங்கள் பற்றிய விபரத்தை மிகவும் ரகசியமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
==================