சென்னையில் பசுமை போக்குவரத்துக்கு மேலும் வேகம் :
சென்னை மாநகர மக்களின் தினசரி பயணத்தை மேம்படுத்தும் வகையில் 130 புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்துகளை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
இந்த பேருந்துகள் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் (MTC) இரண்டாம் கட்ட மின்சார பேருந்து திட்டத்தின் முதல் தொகுப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மொத்தம் 750 புதிய மின்சார பேருந்துகளை இயக்கும் திட்டத்தில் இந்த 130 பேருந்துகள் முக்கிய மைல்கல்லாக கருதப்படுகின்றன.
ஏற்கனவே 625 பேருந்துகள் சேவையில் :
சென்னையில் முதல் கட்டமாக ரூ.697 கோடி செலவில் 625 மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி உள்ளிட்ட முக்கிய பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
தினசரி லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் சென்னை போக்குவரத்து சேவையில் மின்சார பேருந்துகளின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
7 பணிமனைகளில் இருந்து இயக்கம் :
புதிய இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் ஆலந்தூர், பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே.நகர், ஐயப்பந்தாங்கல் மற்றும் சென்ட்ரல்-2 உள்ளிட்ட 7 பணிமனைகளில் இருந்து மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
750 பேருந்துகளும் முழுமையாக சேவைக்கு வந்த பிறகு, சென்னையின் மொத்த மின்சார பேருந்துகள் எண்ணிக்கை 1,375 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகளுக்கான நவீன வசதிகள் :
12 மீட்டர் நீளமுள்ள இந்த நவீன பேருந்துகளில் குளிர்சாதன வசதி, சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் அடிப்படையிலான தகவல் அமைப்பு, அவசரகால பொத்தான்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அணுகல் வசதிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், ஒரே முறை சார்ஜ் செய்தால் சுமார் 200 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இப்பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.