ஆவின் பால் விலை உயர்வு அமல்:
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய நடவடிக்கைகள் தொடங்கியதுமே, 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.
பால் கொள்முதல் விலை ரூ.38
அப்போது, “தற்போது 4.3 சதவிகிதம் கொழுப்பு சத்து மற்றும் 8.2 சதவிகிதம் இதர சத்து அடங்கிய ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலையாக 35 ரூபாயும், மாநில ஊக்கத்தொகையாக ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் என ஒரு லிட்டருக்கு 38 ரூபாயும் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பால் உற்பத்தியாளர்களின் உழைப்பு, அதிகரித்து வரும் செலவுகளை கடந்த கால அரசு கருத்தில் கொள்ளவில்லை. உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டிய எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் இருந்துள்ளது.
கடந்த காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், கடுமையான நிதி சுமைக்கு மத்தியிலும் நமது அரசு பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது உழைப்பிற்கு மரியாதை வழங்க முடிவு செய்துள்ளோம் என முதல்வர் ஜோசப் விஜய்.
கொள்முதல் விலையில் மாற்றம் கொண்டுவர நடவடிக்கை:
தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு 42 முதல் 45 ரூபாய் வரையிலும், ஒரு லிட்டர் எருமைப் பாலுக்கு 50 முதல் 55 ரூபாய் வரையிலும் வழங்கி வருகின்றனர்.
இதனால் வாடிக்கையாளர்கள் ஆவினுக்கு பால் விநியோகிப்பதை தவிர்த்து தனியார் நிறுவனங்களுக்கு பாலை வழங்கவே முன்னுரிமை வழங்குகின்றனர். அந்த வகையில் ஆவின் பால் கொள்முதல் 34 லட்சம் லிட்டரிலிருந்து 30 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது.
இதேநிலை தொடர்ந்தால், ஆவினின் விநியோகம் வெகுவாக குறைந்து தனியார் பொருட்களை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடும் என்ற சூழல் நிலவியது. அதேநேரம், கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் நீண்ட நாட்களாக உற்பத்தியாளர்களால் கோரிக்கை வைக்கப்பட்டது.
பால் கொள்முதலை உயர்த்த முடிவு :
இந்நிலையில் ஆவினின் தினசரி பால் கொள்முதலை, தற்போதுள்ள சுமார் 30 லட்சம் லிட்டரிலிருந்து 39 லட்சம் லிட்டராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். இதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள விலைத் திருத்தத்தின்படி, பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
விற்பனை விலை உயர்வு?
கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தரப்படுத்தப்பட்ட மற்றும் டோன் செய்யப்பட்ட பாலின் சில்லறை விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தியிருந்தது.
2021 மே மாதம் திமுக அரசு பதவியேற்ற பிறகு, ஒரு லிட்டர் விலை ரூ.3 குறைக்கப்பட்டது. அப்போதிருந்து, தரப்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.44-க்கும், டோன்ட் பால் ஒரு லிட்டர் ரூ.40-க்கும் விற்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி :
தனியார் பால் நிறுவனங்களை விட ஆவின் பாலின் விலை ஒரு லிட்டருக்கு ரூ.20 முதல் ரூ.22 வரை குறைவாக உள்ளது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக, ஆவின் நிறுவனத்தின் பால் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால் சில்லறை விற்பனை விலையும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.