எடப்பாடி சமூக வலைதளப்பபதிவு
Edappadi Palanisamy Condemns Incident Of Cuddalore Farmer Set on Fire to Death : விவசாயி தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதிய விவசாயி ராஜேந்திரன், இருசக்கர வாகனத்தில் சென்றபோது காரில் வந்த மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கொடூரமான சம்பவங்கள் திமுக ஆட்சியில் தொடர்கிறது
மேலும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதற்கு சாட்சி உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தபடியே அவர் சாலையில் ஓடிய காட்சி, இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம்–ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கான பயங்கர சாட்சி. தினந்தோறும் “இன்னும் என்ன கொடுமை நடக்கப் போகிறதோ?” என்ற அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்றும், தீயில் எரிந்தது ராஜேந்திரன் மட்டும் அல்ல தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான். “இதற்கும் மேலாக சட்டம்–ஒழுங்கு சீர்கெட முடியாது” என்று நினைக்கும் ஒவ்வொரு தருணத்திலும், அதைவிடக் கொடூரமான சம்பவங்களை இந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
விடியா திமுக அரசுக்கு கோரிக்கை இந்த கொடூர கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.