எடப்பாடி பழனிசாமி
Edappadi Palanisamy Tweet on DMK Govt : வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை மற்றும் நிகழ்ச்சிகள் என நேரிலும், தனியாகவும், கூட்டமாகவும் தங்களை மக்களிடம் கூறி முன்னிறுத்தி வருகிறது. இந்நிலையில், திமுக கட்சியின் அவலநிலையையும் எதிர்கட்சிகள் ஒவ்வொரு முறையும் சுட்டிகாட்டி தோலுரித்து வருகிறது. இந்நிலையில், திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமை, கொள்ளை, ரவுடிசம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் பொம்மை முதல்வர் என்ன செய்கிறார் என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து எக்ஸ் வலைதளத்தில் விமர்சனம் செய்து வந்தார்.
எடப்பாடி எக்ஸ் பதிவு
இதைத்தொடர்ந்து தற்போது பரபரப்பான எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை பாரிமுனை பகுதியில் கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் அருகே இரு ரவுடிக் கும்பல் கத்திகளுடன் விரட்டிச் சென்று மோதிக் கொண்டதால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதாகவும், சென்ட்ரல் அருகே பல்லவன் சாலையில் இருவர் கத்தியுடன் மோதிக் கொண்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது
மேலும், திமுக ஆட்சியில் தமிழகம், குறிப்பாக தலைநகர் சென்னை, ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது. காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் ஒரு ஆட்சியில், மக்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். தலைநகரின் பிரதான சாலைகளில் ரவுடிகள் கத்தியோடு வலம் வந்து சண்டை போடுவது என்பது, இந்த நொடி, இந்த இடம் என எங்கும், எப்போதும் பாதுகாப்பு மக்களுக்கு இல்லை என்பதையே வெட்ட வெளிச்சமாக்குகிறது.
மக்கள் அலறியதே ஸ்டாலின் அரசின் சாதனை
ரவுடியிசத்தைக் கண்டு மக்கள் அலறி ஓடியதை வேண்டுமானால், தமிழ்நாட்டில் இதுவரை நடந்திடாத "ஸ்டாலின் அரசின் சாதனை" என்று இந்த பொம்மை முதலமைச்சர் விளம்பரம் செய்துக் கொள்ளலாம். தலைநகரில் தலை விரித்தாடும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என @mkstalin மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவை அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ரீடுவிட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.