தருமபுரியில் எடப்பாடி பழனிசாமி :
Edappadi Palanisamy About Karur Stampede Incident : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தருமபுரியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அரசியல் நிகழ்ச்சிகளின்போது மக்களுக்கும், தலைவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை என கூறினார். மேலும் கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கு அரசு போதிய பாதுகாப்பு ஏற்படுத்தித் தராததுதான் காரணம் என குற்றம் சாட்டினார்.
கரூர் சம்பவத்துக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்
அரசியல் நிகழ்ச்சிகளின்போது மக்களுக்கும், தலைவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை. முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல் துறை உள்ளதால், கரூர் சம்பவத்துக்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும். மக்கள் கேள்விகளுக்கும் அவர்தான் பதில் கூற வேண்டும். தற்போது ஒரு நபர் ஆணைய விசாரணை தொடங்கியுள்ளது.அவர்களின் விசாரணை முடிவை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு மற்றவர்கள் பேசக்கூடாது
ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு ஐஏஎஸ் அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக பேசுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கடந்த அதிமுக ஆட்சியின்போது திமுக-வுக்கு பல கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது திமுக அரசு எதிர்க்கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் அரசியல் செய்கிறது என்று விமர்சித்தும் ஆட்சி, அதிகாரம் இருக்கிறது என்று ஆடினால் காணாமல் போய்விடுவீர்கள் என்று கூறினார்.
இடதுசாரிகள் அரசுக்கு ஆதரவாக இருக்கின்றனர்
இதைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம் என கூறும் முதல்வர் ஸ்டாலின், கரூர் சம்பவத்தின் மூலம் தேசிய அளவில் தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார் என்றும் விசிக, இடதுசாரி கட்சிகள் மனசாட்சியை இழந்து விட்டனர் என்று பதிலளித்தார். திருச்சி, விழுப்புரத்தில் அவர்கள் மாநாடு நடத்த அனுமதி கேட்ட இடத்துக்கு திமுக அரசு அனுமதி தரவில்லை என்று அப்போது குற்றம்சாட்டினர். ஆனால், தற்போது கரூர் சம்பவத்தில் அரசுக்கு ஆதரவாக நிற்கின்றனர் என்று கேள்வி எழுப்பினார்.
பல்லாயிரம் கோடி முறைகேடு
டாஸ்மாக் என்றும் மதுபான முறைகேடு மூலம் பல்லாயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளது. மீண்டும் அதிமுக அரசு அமைந்தவுடன் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்த அவர், அதேபோல, திமுக ஆட்சியில் முடக்கிவைத்துள்ள திட்டங்கள் அனைத்தும் மீண்டும் அமல்படுத்தப்படும். அதற்கு பொதுமக்கள் அதிமுக-வை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார்.
மேலும் படிக்க : ’விஜய் மீது வழக்கு போட ஏன் அச்சம்?’: திமுக அரசுக்கு திருமா கேள்வி
கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்கள்
முன்னதாக, கூட்டம் தொடங்கும்போது கரூர் சம்பவத்துக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டதை அடுத்து கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், முல்லைவேந்தன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் எடப்பாடி பழனிசாமி கூறிய அனைத்து கருத்துகளுக்கும் பலர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இவர் பேசிய அந்ந பரபரப்பு காணொளியை நெட்டிசன்கள் பலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து டிரெண்ட் செய்தும் விமர்சித்தும் வருகின்றனர்.