முதல்வர் விஜய் லண்டன் பயணம்
Vijay’s London Trip Attracts Rs 15,300 Crore Investment : தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முன்னிலையில்,லண்டனில் தமிழ்நாட்டில் புதிய உற்பத்தி ஆலைகள், உலகளாவிய திறன் மையங்கள் , ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை நிறுவுவதற்காக முன்னணி சர்வதேச நிறுவனங்களுடன் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாகன உதிரிபாக உற்பத்தியில் புதிய முதலீடு
செப்டம்பர் 14ம் தேதி லண்டனில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு அரசின் முதலீட்டு மேம்பாட்டு முகமையான Guidance Tamil Nadu மற்றும் முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக, வாகன உதிரிபாகங்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனம் இந்தியாவில் தனது முதல் புதிய உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழுமத்தின் முதலீடுகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் அதன் பிரதிநிதிகள் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து விளக்கியுள்ளனர்.
ரூ.11,000 கோடி முதலீடு 7,000 வேலைவாய்ப்புகள்
45க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் தமிழ்நாட்டில் தனது செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
இதற்காக சுமார்ரூ.11,000 கோடிமதிப்பிலான புதிய முதலீட்டு வாய்ப்புகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 7,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முதலீடுகள் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த கூட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மை நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட உள்ளன.
மின்மாற்றி உற்பத்தி - ரூ.300 கோடி
பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்ட Wilson Power Solutions நிறுவனம் திருவள்ளூர் மாவட்டத்தில் மின்மாற்றி உற்பத்தி பணிகளின் அடுத்தகட்ட விரிவாக்கத்திற்காக ரூ.300 கோடி முதலீடு செய்ய உள்ளது.
400 பேருக்கு வேலை கிடைக்கும்
இதன் மூலம் 400 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை மூலம் மேம்பட்ட மின் மற்றும் விநியோக மின்மாற்றி உற்பத்தியில் தமிழகத்தின் திறன் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திறன் மையங்கள் விரிவாக்கம்
தமிழ்நாட்டில் Global Capability Centres எனப்படும் உலகளாவிய திறன் மையங்களை நிறுவவும் விரிவுபடுத்தவும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் என பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இந்த முதலீட்டு முயற்சிகள், தமிழகத்தின் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு சூழலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் மூலம், 15,300 கோடி அளவுக்கு முதலீடு ஈர்க்கப்பட்டு இருப்பதாகவும், 10 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
================