AIADMK MLAs meet TVK ministers: S.P. Velumani puts an end to rumors!
அதிமுக உட்பட மாற்றுக் கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் தமிழக முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் சேர்ந்து வரும் நிலையில் அதிமுகவில் அதிருப்தியில் உள்ள எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் தவெக அமைச்சர்களை சந்தித்து உள்ளது தற்போது பேசிபொருளாகியுள்ளது.
தவெக அமைச்சர்களை சந்தித்த அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள்
வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் மூத்த சட்டமன்ற உறுப்பினர்களான சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி மற்றும் கே.பி. அன்பழகன் ஆகியோர் தவெக அமைச்சர்களான செங்கோட்டையன் மற்றும் ஆனந்த் ஆகியோரை சந்தித்துப் பேசினர்.
சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி. வேலுமணி இது குறித்த தெளிவான விளக்கத்தை அளித்தார்.
எஸ்.பி. வேலுமணி அளித்த விளக்கம்
“நாங்கள் தவெக அமைச்சர்களை சந்தித்தது முழுக்க முழுக்க எங்கள் தொகுதி தொடர்பான கோரிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்துப் பேசுவதற்காக மட்டுமே” என்று அவர் குறிப்பிட்டார்.
கட்சி மாறும் எண்ணம் இல்லை
“அதிமுக தான் எங்கள் கட்சி. நாங்கள் அதில் தான் தொடர்வோம். இதை எப்போதோ நாங்கள் தெளிவுபடுத்திவிட்டோம். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நாங்கள் ஏன் தவெக-விற்கு ஆதரவளித்தோம் என்பதையும் பலமுறை தெளிவாக சொல்லிவிட்டோம்” எனத் தெரிவித்தார்.
தேவையற்ற வதந்திகள் தவறானவை
“நாங்கள் தவெக-விற்கு செல்கிறோமா என்ற கேள்வியே தேவையில்லாத ஒன்று. அதிமுக எங்களை வளர்த்தெடுத்த சொந்தக் கட்சி.
ஆனால், சிலர் வேண்டுமென்றே நாங்கள் தவெக-வில் இணையப் போவதாக தேவையில்லாத வதந்திகளைக் கிளப்பி விடுகிறார்கள். எனவே, எங்களிடம் வந்து தவெக-வில் இணைகிறீர்களா எனக் கேள்வி கேட்பதே தவறானது” என்று கூறி யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
=====