சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோவில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார். நகை திருட்டு வழக்கில் தனிப்படை போலீசாரால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு மரணம் அடைந்தார்.
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக காவலர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.
சிபிஐ வசம் அஜித்குமார் வழக்கு :
வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தின் கடும் அதிருப்தி, எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரல் காரணமாக சிபிஐக்கு மாற்றப்பட்டது.
பொதுமக்களின் அதிருப்தியை சமாளிக்கும் வகையில், அஜித்குமார் குடும்பத்திற்கு தமிழக அரசு அரசு வேலையும், வீட்டு மனை பட்டாவும் வழங்கியது.
அஜித் குடும்பத்திற்கு நிவாரணம் :
அதன்படி, அஜித்குமார் தம்பி நவீன்குமாருக்கு அரசு வேலை வழங்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், வீட்டில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் தனக்கு அரசு வேலை கொடுக்கப்பட்டு இருப்பதாக வேதனை தெரிவித்தார்.
குடும்பத்தினர் அதிருப்தி :
வயதான தாயாரை விட்டுவிட்டு அவ்வளவு தூரம் தினமும் சென்று வர முடியாது என அதிருப்தி வெளியிட்ட அவர், அரசுக்கு கொடுத்த வீட்டு மனை பட்டா குறித்தும் தனது ஆதங்கத்தை குறிப்பிட்டு இருக்கிறார்.
திமுக அரசுக்கு கேள்வி :
காட்டுப் பகுதிக்குள், தண்ணீர் இல்லாத இடத்தில் கொடுக்கப்பட்டுள்ள வீட்டு மனை பட்டாவால் தனக்கு என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ள நவீன், இதற்கு கொடுக்காமலேயே இருந்து இருக்கலாம் என்கிறார்.
=====