ராஜ்யசபா தேர்தல்
தமிழகத்தில் 6 ராஜ்யசபா தொகுதிகளில் காலியாகின. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில், திமுக சார்பில் 4 பேரும், அதிமுக 2 பேரும் தேர்வு செய்ய முடியும்.
அதன்படி, கூட்டணி கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்தன.
திமுகவில் சர்ப்ரைஸ்
திமுக சார்பில் ஏற்கனவே எம்பியாக இருந்த திருச்சி சிவா மீண்டும் அறிவிக்கப்பட்டார். திமுக செய்தித் தொடர்பாளர் மற்றும் முரசொலி நாளிதழின் ஆங்கிலப் பதிப்பான 'The Rising Sun' ஆசிரியருமான கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் புது முகமாக ராஜ்யசபாவுக்கு செல்கிறார்.
கூட்டணிக்கு இரண்டு சீட்
மற்ற இரண்டு இடங்கள் கூட்டணிக்கு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. அதன்படி, காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இவர்கள் இருவரும் புதுமுகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக - தம்பிதுரை
அதிமுக சார்பில் 2 பேர் தேர்வு செய்யப்படலாம் என்ற நிலையில், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான தம்பிதுரை மீண்டும் ராஜ்யசபா எம்பியாகிறார்.
பாமக - அன்புமணி
கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் பாமகவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராஜ்யசபா உறுப்பினராக இருக்கிறார்.
வேட்பு மனுத்தாக்கல்
திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்கே சுதீஷ் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதேபோன்று, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பாக போட்டியிடும் தம்பிதுரை, அன்புமணி ஆகியோரும் மனுத்தாக்கல் செய்தனர்.
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு
போட்டியிருந்தால் 18ம் தேதி தேர்தல் நடத்தப்படும். அப்படி இல்லை என்றால், 6 பேரும் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்படுவார்கள். ராஜ்யசபா சீட் பங்கீடு திமுக, அதிமுகவில் பெரிய சிக்கல் இன்றி சுமூகமாக முடிந்து இருக்கிறது.
இனி, சட்டமன்ற தேர்தல் பங்கீடு மட்டுமே நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
====