அதிமுக - தவெக கூட்டணி?
TTV Dhinakaran on ADMK TVK Alliance : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திக்க விஜய் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தொலைபேசியில் பேசியதாகவும் தகவல் வெளியானது. இந்தநிலையில், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், தெவெக கொடி காண்பிக்கப்பட்டதை வரவேற்று பேசி எடப்பாடி, பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டதாகவும், அதிமுக சிறப்பான கூட்டணியை அமைக்க இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
அதிமுகவினர் கையில் தவெக கொடி
எடப்பாடியின் பேச்சு, கூட்டணி தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி கூட்டங்களில் அதிமுகவினரே தவெக கொடியை ஏந்தியுள்ளனர். விஜய் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்பதற்காக கூட்டங்களில் தவெக கொடியை காண்பிக்கின்றனர். அதிமுக தொண்டரே தவெக கொடியை பிடித்திருப்பது பத்திரிகைகளில் அம்பலமாகியுள்ளது.
விஜய் தலைமையை எடப்பாடி ஏற்பார்
எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தியதில் இருந்தே பாஜக கூட்டணி பலவீனமானது. விஜய் தலைமையை ஏற்று கூட்டணிக்கு செல்ல எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார். விஜய் தலைமையை ஏற்க எடப்பாடி பழனிசாமி தயாரானதில் இருந்து அதிமுக பலவீனமானது உறுதியாகியுள்ளது. அரசியலில் தரம் தாழ்ந்து செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி. கரூர் துயரம் நடந்திருக்கும் இந்த நேரத்தில் கூட்டணி பற்றி எடப்பாடி பேசுவது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பலவீனமாகி விட்டது
விஜய் தலைமையை ஏற்கும் அளவுக்கு அதிமுக பலவீனமாகிவிட்டது. வீடு பற்றி எரியும்போது சுருட்டுக்கு நெருப்பு கேட்கிறார் எடப்பாடி பழனிசாமி. தவெக தலைவர் விஜய் எடப்பாடி உடன் கூட்டணிக்கு வந்தால் பாஜகவை எடப்பாடி கழற்றி விடுவார். எடப்பாடி பழனிசாமி நம்பகத்தன்மை அற்றவர். துரோகத்தை தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தவெக தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்களா?, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்குவதற்காகவா விஜய் புதிய கட்சியை தொடங்கினார்?” என்று தினகரன் கேள்வி எழுப்பினார்.
===============