Archaeology Department Intensifies Efforts to Retrieve Pallava-Era Copper Plates from Scotland! source:google
தமிழ்நாடு

ஸ்காட்லாந்தில் இருக்கும் பல்லவர் கால செப்பேடுகள் : மீட்க தொல்லியல்துறை தீவிரம்!

ஸ்காட்லாந்தின் எடின்பரோ பல்கலைக்கழக நூலகத்தில் பல்லவ மன்னர்களின் 7 செப்புத் தகடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Kavitha prasanna

தொல்லியல்துறை தீவிர நடவடிக்கை

இந்தியாவின் அரிய வரலாற்று ஆவணங்களையும், கலைப் பொக்கிஷங்களையும் வெளிநாடுகளில் இருந்து மீட்டெடுக்கும் பணிகள் அண்மைக்காலமாக வேகம் எடுத்துள்ளன.

அந்த வகையில், தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைமிக்க பல்லவ மன்னர்களின் செப்புத் தகடுகளை மீண்டும் தாய்நாட்டிற்கு கொண்டு வர இந்தியத் தொல்லியல் துறை (ASI) தீவிர நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட சோழர் செப்பேடுகள்

இதற்கு ஒரு முக்கியத் தொடக்கமாக, 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகள் சமீபத்தில் நெதர்லாந்து நாட்டிலிருந்து முறைப்படி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியின் அரசுமுறை பயணம்

கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக அந்நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணங்கள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நெதர்லாந்து நாட்டின் அரசுமுறைப் பயணத்தின் மூலம் சாத்தியமாகி, தாயகம் திரும்பியுள்ளன.

ஸ்காட்லாந்தில் பல்லவர் காலச் சாசனங்கள்

இதனைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள இந்திய வரலாற்று ஆவணங்களைக் கண்டறியும் பணியில் தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக, ஸ்காட்லாந்தின் புகழ்பெற்ற எடின்பரோ பல்கலைக்கழக நூலகத்தில் பல்லவ மன்னர்களின் 7 செப்புத் தகடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பல்லவ மன்னர்களின் ஆட்சி

கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த இந்த அரிய செப்பேடுகள், காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு கி.பி. 250 முதல் 575 வரை ஆட்சி புரிந்த முற்காலப் பல்லவ மன்னர்களான விஷ்ணு கோபவர்மன் மற்றும் சிம்மவர்மன் ஆகியோரால் வெளியிடப்பட்டவை ஆகும்.

பின்னணியும் மீட்பு முயற்சியும்

19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளரான சர் வால்டர் எலியட் என்பவரால் இந்த 7 செப்புச் சாசனங்கள் சேகரிக்கப்பட்டன. இதில் 6 தகடுகள் ஆந்திரப் பிரதேசத்திலிருந்தும், ஒரு தகடு குஜராத்திலிருந்தும் கண்டெடுக்கப்பட்டவை ஆகும்.

நமது நாட்டின் விலைமதிப்பற்ற கலாசாரப் பொக்கிஷமாகக் கருதப்படும் இந்த 7 செப்புத் தகடுகளையும் ஸ்காட்லாந்திலிருந்து மீட்டுக் கொண்டு வர தொல்லியல் துறை அதிகாரிகள் தற்போது அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

======