assembly elections in Tamil Nadu, female voters voted in larger numbers than male voters google
தமிழ்நாடு

”தேர்தலில் சாதித்த தமிழக பெண்கள்!” : ஆண்களை விட அதிக அளவில் வாக்களித்து அசத்தல் : ஆண்கள் 83.57%, பெண்கள் 85.76%

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து அசத்தி இருக்கிறார்கள்.

Kannan

தமிழக சட்டமன்ற தேர்தல்

234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டப் பேரவைக்கு ஒரே கட்டமாக நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்துள்ளனர்.

தமிழக வாக்காளர்கள்

தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 பேர், பெண் வாக்காளர்கள் 2,89,60,838 பேர், மூன்றாம் பாலினத்தவர் 7,617 பேர் அடங்குவர்.

இளம் வாக்காளர்கள்

இளம் வாக்காளர்களாக கருதப்படும் 1819 வயதுக்குட்பட்டவர்கள் 12.51 லட்சம் பேர் உள்ளனர். மேலும், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 4.63 லட்சம் பேரும், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 3.99 லட்சம் பேரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

வாக்காளர்கள் எண்ணிக்கை வீழ்ச்சி

சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் கணிசமான மாற்றம் ஏற்பட்டது. திருத்தத்திற்கு முன்பு 6,41,14,587 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 74,07,207 பேர் குறைந்து 12 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஆண்களை முந்திய பெண்கள்

வாக்குப்பதிவு சதவீதத்திலும் பெண்கள் முன்னிலை வகித்துள்ளனர். தமிழகம் முழுவதும் மொத்தமாக 85.13 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆண்கள் 83.57 சதவீதம் வாக்களித்துள்ள நிலையில், பெண்கள் 85.76 சதவீதம் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

பெண்களிடம் அரசியல் விழிப்புணர்வு

பெண்களின் அரசியல் விழிப்புணர்வு மற்றும் தேர்தல் செயல்பாடுகளில் அவர்களின் ஈடுபாடு அதிகரித்து வருவது தெளிவாகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் பெண்கள் அதிக அளவில் வாக்களிப்பது புதிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

பெண்களுக்கான நலத்திட்டங்கள், சுய உதவி குழுக்களின் சமூக இணைப்பு, கல்வி வளர்ச்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் விழிப்புணர்வு முகாம்கள் ஆகியவை முக்கிய பங்காற்றியுள்ளன.

தவெகவின் தாக்கம்

அனைத்து கட்சிகளும் பெண்களின் வாக்கை குறிவைத்து அறிவித்த நலத்திட்டங்கள், தவெகவின் வருகை மகளிர் அதிக அளவில் வாக்களிக்க காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்கள் உள்பட 30 வயதுக்குள் இருக்கும் பெண்கள், ஜனநாயக கடமையை நிறைவேற்ற அதிக ஆர்வம் காட்டினர். இதில் தேர்தல் வெற்றியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த அரசியல் கட்சி பெண்களின் நம்பிக்கையை வென்றுள்ளது என்பது தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது தெளிவாகும். ==============