தவறை உணர்ந்து கொண்டார் ராகுல் :
Anbumani on Caste Wise Census in Tamil Nadu : இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, “காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்களை பாதுகாக்க, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தத் தவறியதன் மூலம் தாம் பெரும் தவறை செய்து விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். தாமதம் ஆனாலும் தவறை அவர் உணர்ந்திருப்பது மிகச்சரியான நிலைப்பாடு.
சாதிவாரி கணக்கெடுப்பு - பாமக வலியுறுத்தல் :
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் 2011ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை சதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று அரசின் அங்கமாக இருந்த பாமக வலியுறுத்தியது. இதுபற்றி டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாததும் தவறுதான் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.
மத்திய அரசால் நடத்த முடியாது :
மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பால்(Caste Wise Census in India) மாநிலங்களின் சமூகநீதித் தேவைகளை நிறைவேற்றுவதற்கான தரவுகளை வழங்க முடியாது; ஒவ்வொரு மாநிலமும் அதன் சமூகநீதித் தேவைகளுக்காக தனித்தனியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் ராகுல் கூறியுள்ள கருத்தின் பொருளாகும்.
உண்மையை ஏற்க மறுக்கும் முதல்வர் :
இந்தக் கருத்தை தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் பல வகைகளில் எடுத்துக் கூறியும் அவரால் அதன் நுட்பத்தையும், தேவையையும் புரிந்து கொள்ள முடிய வில்லை. அவரைப் பொறுத்தவரை சாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஒவ்வொரு ஜாதியின் மக்கள்தொகை விவரங்களை வெளிக்கொண்டு வரக்கூடியது. அந்த விவரங்கள் வெளிவந்தால் மக்களை ஏமாற்றி பிழைக்க முடியாது என்பது தான் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த எண்ணமாக இருக்கிறது.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு :
ஆட்சியை இழந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு தவறை ராகுல் காந்தி உணர்ந்து கொண்ட நிலையில், ஸ்டாலின் பதவிக் காலத்திலேயே உணர வேண்டும். தமிழகத்தில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு(Caste Wise Census in Tamil Nadu) நடத்த ஆணையிடவேண்டும்” இவ்வாறு அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
====