BJP leader Nainar Nagendran said, after talking about social justice, DMK government only promoting Gopalapuram justice Google
தமிழ்நாடு

”திமுக பேசுவது சமூகநீதி, தூக்கி பிடிப்பது கோபாலபுர நீதி: நயினார்

Nainar Nagendran Criticized DMK Government : சமூகநீதி பேசிவிட்டு, கோபாலபுர நீதியை மட்டுமே திமுக அரசு தூக்கிப் பிடிக்கிறது என்று, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Kannan

இருளர் மக்கள் போராட்டம்

Nainar Nagendran Criticized DMK Government : திருவண்ணாமலை மாவட்டத்தில் இருளர் சமுதாய மக்களுக்கு திமுக அரசு தொகுப்பு வீடுகளை கட்டித் தரமால் உள்ளது. இதனால், ஆவேசம் அடைந்த அவர்கள் ஆதார், பட்டா, வாக்காளர் அட்டைகளை தூக்கி வீசி போராட்டம் நடத்தினர்.

இதை சுட்டிக் காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “ திருவண்ணாமலை மாவட்டம் கண்ணக்கந்தல் மோட்டூர் பகுதியில் இருளர் சமுதாய மக்களுக்கான தொகுப்பு வீடுகளை முறையாகக் கட்டித்தராமல், ஆதார், பட்டா, வாக்காளர் அடையாள அட்டைகளை வீசியெறிந்து போராடும் நிலைக்கு பழங்குடியினரைத் தள்ளி இருக்கிறது திமுக அரசு.

மக்கள் பணத்தை வாரி இறைப்பதா?

தமது தந்தையின் நினைவுச்சின்னமாக வானுயர பேனா சிலை வைக்கவும், தமது மகனின் ஆசைக்காக கார் ரேஸ் நடத்தவல்ல சாலைகளை அமைப்பதற்கும், பணத்தை வாரி இறைக்கத் தயாராக இருக்கும் முதல்வர் ஸ்டாலின் ஏழை எளிய பழங்குடியின மக்களுக்கான வீடுகளைக் கட்டித் தருவதில் மட்டும் மெத்தனம் காட்டுவது ஏன்?

மேடைகளில் சமூகநீதி பேச்சு

பிரம்மாண்ட மேடைகளில் சமூக நீதி குறித்து பெருமையாகப் பேசுவதும், விளம்பரங்களில் சமூக நீதியின் காவலர்களாய்த் தங்களை முன்னிறுத்திக் கொள்வதும், நிதர்சனத்தில் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினத்தவர்கள் நலனைக் கடைக் கண் கொண்டும் காணாது அனுதினமும் அவர்களைப் போராட வைப்பதும் தான் திமுக அரசின் வழக்கம்.

குடும்பத்திற்கு மட்டுமே முக்கியத்துவம்

மொத்தத்தில், சொந்தக் குடும்பத்தின் விளம்பரத்திற்கு முக்கியத்துவமும், பழங்குடி சமுதாயத்தின் வாழ்வாதாரத்திற்குப் பாராமுகமும் காட்டும் திமுக அரசின் இந்தக் கொள்கையின் பெயர் சமூகநீதியல்ல, கோபாலபுர நீதி” இவ்வாறு அந்த அறிக்கையில் நயினார் நாகேந்திரன் காட்டமாக விமர்சித்துள்ளார்.

=====================