ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி :
Madras High Court on TN Government Vehicle : திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், புரட்சி பாரதம் கட்சி எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த போலீஸார், பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் வழங்க உத்தரவிடக் கோரி வனராஜ், மணிகண்டன், கணேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதை விசாரித்த, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், காவல்துறை வாதத்தை ஏற்று, ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.
சிறுவன் கடத்தல் வழக்கு - அதிருப்தி :
‘வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட போதும், வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கைகளை பார்க்கும்போது விசாரணையில் போதுமான முன்னேற்றம் இல்லை. இதுவரை நடந்த விசாரணை நம்பிக்கை ஏற்படும் வகையில் இல்லை. அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு இந்த வழக்கு ஓர் உதாரணம்’ என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
போலீஸ் ராஜ்ஜியமா?, நீதிபதி கவலை :
‘சாதாரண மக்களின் வாழ்வு, சுதந்திரம் குறித்த கவலையை இந்த வழக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை பார்க்கும்போது, நாடு போலீஸ் ராஜ்ஜியத்துக்கு செல்கிறதோ என்று அச்சம் கொள்ள வைக்கிறது” என்று நீதிபதி அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
நேர்மையாக விசாரணை நடத்துக :
கடத்தல் வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர்களாக மூத்த ஐபிஎஸ் அதிகாரியும், சட்டமன்ற உறுப்பினராகவும், அரசியல் கட்சியின் தலைவராகவும் உள்ள ஒருவரும் உள்ளiர். எனவே, காவல் துறை விசாரணையை முறையாக நடத்தி, மக்களின் நம்பிக்கையை மீட்டு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
=====