எம்எல்ஏ ஆன சி.வி.சண்முகம்
அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் சி.வி. சண்முகம், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றார்
மாநிலங்களவை - 2 இடங்கள்
இதையடுத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை சி.வி. சண்முகம் ராஜினாமா செய்தார். எனவே அந்த இடம் காலியானது. இதேபோன்று மகாராஷ்டிராவிலும் ஒரு மாநிலங்களவை இடம் காலியாக உள்ளது.
எம்பியாக இருந்த சுனேத்ரா அஜித் பவார் மாதில அமைச்சரானதால், எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.
இடைத்தேர்தல் அறிவிப்பு
இந்த இரண்டு இடங்களுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜூன் 1 முதல் மனுத்தாக்கல்
அதன்படி, மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 1ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 8ஆம் தேதி.
ஜூன் 9ல் பரிசீலனை
வேட்புமனுக்கள் மீது ஜூன் 9ஆம் தேதி பரிசீலனை நடைபெறும். அதன்பிறகு, வேட்புமனுவை திரும்பப் பெற விரும்புவோருக்கு ஜூன் 11ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் 18ல் தேர்தல்
இதனை தொடர்ந்து, ஜூன் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதே நாளில் வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி இருந்தால் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறும். இல்லை என்றால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு, வெற்றி பெற்றவர் யார் என்பது அறிவிக்கப்படும்.
முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில், இந்த இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. காரணம், இரண்டு பெரிய திராவிட கட்சிகளை வீழ்த்தி தவெக ஆட்சி அமைத்து இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் கால்பதிக்கும் தவெக
அதற்குள் நாடாளுமன்றத்தில் கால்பதிக்கும் வாய்ப்பும் அந்தக் கட்சிக்கு கிடைத்து இருக்கிறது. புதிய ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் மாநிலங்களவை தேர்தல் என்பதால், எந்த கட்சி வேட்பாளரை களமிறக்கும் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
யார் வேட்பாளர், எதிர்பார்ப்பு
தவெகவிற்கு 108 எம்எல்ஏக்கள் வாய்ப்பு இருப்பதால், அந்தக் கட்சி நிறுத்தும் வேட்பாளர்கள் போட்டியின்றி நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. தவெக தலைவரும் முதல்வருமான விஜய் யாருக்கு வாய்ப்பு தரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.
=========