முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம்
உலகளாவிய முதலீட்டாளர்களைச் சந்திக்கவும், தமிழ்நாட்டிற்கு முக்கியத் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் முதல்வர் விஜய் வரும் செப்டம்பர் 10-ம் தேதி பிரிட்டன் நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல்வர் விஜய்யின் இந்த முதல் வெளிநாட்டுப் பயணத்தின் போது, செப்டம்பர் 16 வரை பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகரும் ரேசருமான அஜித் உடனான முதல்வரின் சந்திப்பு?
இந்தப் பயணத்தின் இடையே, செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் லண்டனின் சில்வர்ஸ்டோனில் நடைபெறும் ’மிச்செலின் லே மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை’ முதல்வர் விஜய் நேரில் பார்க்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கார் பந்தயத்தை நேரில் காணத் திட்டம்?
இப்போட்டியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றுப் போட்டியிடுவதால், இந்த நிகழ்வு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதற்காக அஜித் குமார் ஏற்கனவே லண்டனில் தனது கார் ரேசிங் குழுவினருடன் தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: முதல்வர் விஜய்யின் அறிவிப்பு
முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய், மாநிலத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி மற்றும் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
முதல்வர் விஜயை பாராட்டிய அஜித்
முதல்வர் விஜய்யின் இந்தத் திட்டத்தை வரவேற்று பாராட்டுத் தெரிவித்திருந்த நடிகரும், ரேசருமான அஜித் குமார், இளைஞர்களின் திறமைகளைக் கண்டறிந்து வளர்க்கும் தமிழக அரசின் இத்தகைய முயற்சிகள் மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
முதல்வர் விஜய்... ரேசர் அஜித் சந்திப்பு?
இந்நிலையில் முதல்வர் விஜய்..நடிகரும் ரேசருமான அஜித்குமார் இருவரும் லண்டனில் சந்திப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலோங்கி வருகிறது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் 'சேயோன்' திரைப்படத்தில் இணையும் சீமான் : தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
=====