தமிழகத்தின் ஜீவாதாரம் காவிரி
காவிரி நீர் தமிழகத்தின் ஜீவாதாரமாக திகழ்கிறது. மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால், ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை.
எனவே, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி ஸ்தம்பித்து இருக்கிறது.
காவிரியை நம்பி இருக்கும் குடிநீர் ஆதாரங்கள்
காவிரியை மட்டுமே நம்பி திருச்சி மாவட்டம் பெருகமணி உள்ளிட்ட பல்வேறு ஆற்றங்கரைப் பகுதிகளில் பல குடிநீர் ஆதாரக் கிணறுகள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன.
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளை மட்டுமே நம்பி, 10-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட கூட்டுப் குடிநீர் திட்டங்கள் இங்கே செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
காவிரியில் இருந்து மட்டுமே குடிநீர்
டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களான புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களுக்குத் தேவையான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குடிநீர் தட்டுப்பாடு
காவிரி ஆற்றில் தண்ணீர் ஓட்டம் முற்றிலுமாக நின்றுவிட்டதால், இத்திட்டங்களுக்குத் தேவையான குடிநீரை உறிஞ்சி எடுப்பதில் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.
இந்த ஆண்டு கர்நாடக அரசு தனது வழக்கமான நீர்ப் பங்கீட்டைத் தமிழ்நாட்டிற்கு வழங்க மறுத்துவிட்டது.
தங்கள் மாநில அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை என்ற காரணத்தைக் கூறி, நீரைத் திறக்காததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து, பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவே இல்லை.
ஆவியான நீர், மணல் பரப்பாக காவிரி படுகை
சுட்டெரிக்கும் கோடை வெயில், எல் நினோ பருவநிலை மாற்றம் போன்ற இயற்கைக் காரணிகளால் ஆற்றில் இருந்த சொற்ப நீரும் ஆவியாகி, காவிரி ஆற்றுப் படுகை தற்போது மணல் பரப்பாக காட்சியளிக்கிறது.
வேகமாக குறையும் நிலத்தடி நீர்மட்டம்
மழை பெய்யாமல் இதேநிலை நீடித்தால் ஓரிரு வாரங்களில் தீவிரமடையும் என அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
காவிரி ஆற்றுப் படுகையில் உள்ள நிலத்தடி நீர்மட்டத்தைக் கொண்டு இன்னும் சில வாரங்களுக்கு மட்டுமே இந்த கூட்டுப் குடிநீர் திட்டங்களை ஓரளவு இயக்க முடியும்.
அதற்குப் பிறகு ஆற்றின் அடியில் உள்ள நிலத்தடி நீர்மட்டமும் வேகமாகக் குறையத் தொடங்கும் போது, நீர் உறிஞ்சும் கிணறுகளில் தண்ணீர் வரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
இத்தகைய நிலை நீடித்தால், திருச்சி மாநகரம், புறநகர்ப் பகுதிகள் மற்றும் அதனை நம்பியுள்ள ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.
தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை
குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டால் மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளது.
எனவே, அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களை விரைவுபடுத்தி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலமாக கர்நாடகாவிடமிருந்து குறைந்தபட்சம் குடிநீர்த் தேவைகளுக்கான காவிரி நீரையாவது உடனடியாகப் பெற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
============