Central Government given five reasons for rejecting Coimbatore and Madurai Metro Rail projects 
தமிழ்நாடு

கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் : காரணங்களை அடுக்கிய மத்திய அரசு

சென்னை: கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்ததற்கான ஐந்து காரணங்களை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Kannan

கோவை, மதுரை மெட்ரோ

சென்னையைத் தொடர்ந்து, கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக மதுரையில் ரூ.11,360 கோடி, கோவையில் ரூ.10,740 கோடியில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை கொண்டு வர, விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் வழங்கப்பட்டது.

மத்திய அரசு நிராகரிப்பு - திமுக எதிர்ப்பு

இந்த திட்ட அறிக்கையை மத்திய அரசு கடந்த மாதம் திருப்பி அனுப்பியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இரு நகரங்களுக்கான மெட்ரோ ரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கைகளை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று, கோரி, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

ராஜ்யசபாவில் கேள்வி

இந்நிலையில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக நிராகரித்ததா அல்லது மறுத்ததா என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி என்விஎன். சோமு, கேள்வி எழுப்பினார்.

மத்திய அமைச்சர் பதில்

இதற்கு பதிலளித்த வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரத் துறை இணை அமைச்சர் டோகன் சாஹு, ”கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை மற்றும் விரிவான இயக்கத் திட்டம் ஆகியவற்றை தமிழக அரசு சமர்ப்பித்தது. இந்த திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு, சில காரணங்களுக்காக, தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

கோவை நிராகரிப்பு - காரணம்

கோவையை பொருத்த அளவில், குறைந்த சராசரி பயண தூரங்கள் மற்றும் சாலைகளில் தற்போது உள்ள சராசரி வேகங்கள் காரணமாக, மெட்ரோ அமைப்பை பயன்படுத்துவதில் குறைந்த நேர சேமிப்பே இருக்கும். எனவே, மெட்ரோவுக்கு மக்கள் மாறுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

மக்கள் பயன்படுத்துவது குறைவு

மேலும், மாநகராட்சி பகுதியுடன், உள்ளூர் திட்டமிடல் பகுதியின் மக்கள் தொகையும் மெட்ரோ அமைப்பின் சேவையைப் பெறும் என்று எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி பகுதியைவிட 5 மடங்கு பெரிதாக உள்ள உள்ளூர் திட்டமிடல் பகுதியில் வசிப்பவர்கள் மெட்ரோவை பயன்படுத்துவது கடினம்.

5.90 லட்சம் பேர் மட்டுமே பயன்படுத்துவர்

தமிழக அரசால் முன்மொழியப்பட்ட 34 கிமீ. நீள வழித்தடத்துக்கான தினசரி எதிர்பார்க்கப்படும் பயணிகளின் எண்ணிக்கை 5.90 லட்சம் பேர். இது, பெரிய மக்கள் தொகை கொண்ட சென்னை மெட்ரோவின் 55 கி.மீ தொலைவுக்கு தினசரி பயணிகள் எண்ணிக்கையான 4 லட்சத்தைவிட அதிகம்.

ரயில் நிலையங்கள் அமைப்பதில் சிக்கல்

போதுமான வழி உரிமை இல்லாததால், பல இடங்களில் நிலையத்தை நிர்மாணிப்பது சாத்தியமில்லை. பல இடங்களில் குடியிருப்புகள், கடைகளை இடித்து விட்டு, நெருக்கமான பகுதிகளில் வழித்தடம் அமைக்க வேண்டி இருக்கும்.

விரைவு பேருந்து சேவை போதும்

மதுரை மக்களுக்கு கூடுதல் சேவை வழங்குவதற்கு, செலவு குறைந்த சிறந்த அமைப்பான விரைவு பேருந்து போக்குவரத்து அமைப்பே போதுமானது” இவ்வாறு அமைச்சர் டோகன் சாஹு விளக்கம் அளித்தார்.

============