தமிழ்நாட்டில் சர்ச்சை
தமிழ்நாட்டில் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி அப்போதைய திமுக அரசை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்.
ஆனால் அதனை நிராகரித்த அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் இடம் பெறும். கடைசியில் தான் தேசிய கீதம் பாடப்படும் என தெரிவித்தார். இதனால் ஆளுநரோடு மாநில அரசுக்கு கருத்து மோதல் நிலவி வந்தது.
கடைசியில் தமிழ்த்தாய் வாழ்த்து
தவெக அரசு புதிதாக பொறுப்பேற்ற நிலையில் முதலமைச்சர் பதவியேற்பு விழா, அமைச்சர்கள் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம், தேசிய கீதம் ஆகியவை தொடர்ந்து 3வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால் மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை நடத்தும் ஆளுநர் மாளிகை மத்திய அரசு விதிமுறைகளை தான் பின்பற்றும் என தவெக அமைச்சர்கள் விளக்கம் கொடுத்தனர்.
சட்டசபையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து
அதேசமயம் சட்டசபையில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டதோடு, முதல்முறையாக வந்தே மாதரம், தேசிய கீதம் ஆகியவை இசைக்கப்பட்டதை தற்போதைய பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மனமுவந்து பாராட்டினார்.
பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் கோரிக்கை
இதனிடையே கடந்த மாதம் டெல்லியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் விஜய் சந்தித்தார். அப்போது அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
முதல்வர் விஜயின் கோரிக்கை ஏற்பு
இதனையெல்லாம் பரீசிலித்த மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 9ம் தேதி அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களுக்குப் புதிய வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில்...
அதன்படி சில மாநிலங்களில் தேசிய கீதத்துடன் மாநிலப் பாடலும் பாடப்பட்டு இசைக்கப்படுகிறது. தேசிய கீதத்துடன் மாநிலப் பாடல் பாடப்படும்போதெல்லாம் தேசியப் பாடலும் தேசிய கீதமும் ஒன்றாகவே பாடப்பட வேண்டும்.
முதலில் தேசியப் பாடல் பாடப்பட்டு அதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்.
ஒருவேளை மாநில பாடல் பாடும் மாநிலங்களில் முதலில் மாநிலப் பாடல்கள் பாடப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து தேசியப் பாடலும் தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டும்.
மாநிலங்களுக்கு உத்தரவு
நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யும் வகையில் அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
=====================
.