மேகேதாட்டு அணை
காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு எல்லையை ஒட்டியிருக்கும் மேகேதாட்டு பகுதியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது.
கர்நாடகா அறிக்கை நிராகரிப்பு
இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே மேகேதாட்டு அணையின் விரிவான திட்ட அறிக்கை கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. ஆனால், அப்போதே விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்தது.
மத்திய அரசு திருப்பி அனுப்பியது
தாக்கல் செய்யப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை திருத்தியோ அல்லது புதிய விரிவான திட்ட அறிக்கையோ தாக்கல் செய்யலாம் என ஒன்றிய அரசு, கர்நாடகாவிடம் தெரிவித்திருந்தது
இதையடுத்து, விரிவான திட்ட அறிக்கையில் புதிய அம்சங்களை சேர்க்குமாறு மத்திய நீர் ஆணையத்திற்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியது.
தீர்ப்புக்கு எதிராக உள்ளது
கர்நாடக அரசு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தவை காவிரி நடுவர் மன்றம் மற்றும் 2018 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணாக இருப்பதாக கூறி, அதை மீண்டும் கர்நாடக அரசுக்கே மத்திய நீர் ஆணையம் திருப்பி அனுப்பியது.
’பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு தாக்கல் செய்த RTI கேள்விக்கு அளித்த பதிலில், இத்திட்ட அறிக்கை கடந்த மாதமே நிராகரிக்கப்பட்டதாக ஆணையம் கூறியுள்ளது.
விரிவான திட்ட அறிக்கையில் குளறுபடி
2018ல் தாக்கல் செய்யப்பட்ட மேகேதாட்டு அணை திட்ட அறிக்கையில், குடிநீர் தேவைக்கு என்று கூறியதால் மட்டுமே கொள்கை அளவில் அனுமதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால், அதன் பிறகு தாக்கல் செய்யப்பட்ட விரிவான திட்ட அறிக்கையில் சிவனசமுத்திரம் நீர்மின் திட்டத்தை சேர்த்துள்ளதாகவும் மத்திய குற்றம்சாட்டியுள்ளது.
உண்மையான விவரங்கள் இல்லை
பெங்களூரு நகரின் தற்போதைய நீர்த்தேவை என்ன என்ற உண்மையான விவரங்களை தவிர்த்து, பழைய புள்ளிவிவரங்களை கர்நாடக அரசு குறிப்பிட்டுள்ளதாகவும், தற்போது காவிரியில் இருந்து எவ்வளவு நீரை கர்நாடகா பயன்படுத்துகிறது என்ற விவரங்களையும் தெரிவிக்கவில்லை.
மத்திய அரசு நிராகரிக்க காரணம்
சிவனசமுத்திரம் நீர்மின் உற்பத்தி திட்டமும் மேகதாது அணை திட்டமும் ஒன்றோடொன்று இணைக்கும் வகையில் அமைந்திருப்பதே இந்த நிராகரிப்புக்கு காரணம். தேவையான திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தண்ணீரை சேமிக்க கர்நாடகா போடும் திட்டம்
மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தான் தமிழகத்திற்கு உரிய நீரை தர முடியும் என்று கர்நாடகம் தெரிவித்ததை ஏற்க மத்திய அரசு மறுத்து விட்டது.
புதிய அணை கட்டப்பட்டால் கர்நாடகவால் 171 டிஎம்சி தண்ணீரை சேமிக்க முடியும். இது மேட்டூர் அணையின் கொள்ளளவான 93 டிஎம்சியை விட இரண்டு மடங்கு அதிகம்.
இதன்மூலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கிடைக்கும் கர்நாடக சேமித்து வைத்துக் கொள்ளுமே தவிர, தமிழகத்திற்கு ஆணையத்தின் உத்தரவுப்படி தண்ணீர் தருமா என்றால் சாத்தியமே இல்லை என்பது தான் உண்மை.
===================
=========================