சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் சில நொடி பயண நேரத்தைத் தவிர்க்கும் நோக்கில், எதிர் திசையில் (Wrong Way) வாகனங்களை ஓட்டி வரும் ஓட்டுநர்களை கண்காணிக்க சென்னை போக்குவரத்துக் காவல்துறை புதிய தொழில்நுட்ப உத்தியைக் கையாண்டு வருகிறது.
அதிகரித்துவரும் வீதி மீறல்களும் விபத்துகளும்
சற்று தொலைவில் இருக்கும் யு-டர்னை (U-Turn) பயன்படுத்துவதைத் தவிர்க்க, பிற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் எதிர் திசையில் வாகனங்களை செலுத்துவது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
அண்ணாசாலை, வேளச்சேரி 100 அடி சாலை, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை, ராஜீவ் காந்தி சாலை, வடபழனி, கிண்டி உள்ளிட்ட கடுமையான போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதிகளில் இத்தகைய விதிமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இவ்வாறு எதிர் திசையில் வரும் வாகனங்கள் பிற வாகனங்கள் மீது மோதி விபத்துகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
தடுப்புகளில் மறைத்து வைக்கப்படும் கேமராக்கள்
போக்குவரத்து போலீசார் நேரடியாக நின்று பிடிப்பதைத் தவிர்க்கும் வகையில், முக்கிய இடங்களின் சாலைத் தடுப்புகளில் மறைமுகமாக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
எதிர் திசையில் வரும் வாகனங்களின் பதிவு எண்கள் இந்தக் கேமராக்களில் பதிவாகி, அவற்றுக்கான அபராதத் தொகை தானாகவே விதிக்கப்படுகிறது.
விதிமீறலில் ஈடுபட்ட வாகன உரிமையாளர்களின் செல்போன் எண்களுக்குக் குறுஞ்செய்தி மூலம் அபராத விவரங்கள் உடனடியாக அனுப்பப்படுகின்றன.
8 மாதங்களில் 8 லட்சம் வழக்குகள் பதிவு
இந்த மறைமுக கேமரா கண்காணிப்பு முறை மூலம், கடந்த எட்டு மாதங்களில் மட்டும் சுமார் 8 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
எதிர் திசையில் பயணிப்பது சட்டப்படி தவறு என்பதையும் உயிருக்கு ஆபத்தானது என்பதையும் உணர்ந்து, ஓட்டுநர்கள் பொறுப்புடன் செயல்படுவதே அபராதத்தில் இருந்து தப்பிக்க சிறந்த வழி எனப் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ”தவெக கூட்டணி பெயர்” : செப்டம்பர் 9ம் தேதி அறிவிப்பு : முதல்வர் விஜய் தலைமையில் கூட்டணி தலைவர்கள் ஆலோசனை...!
======