Chennai Sessions Court sentenced three Bavaria robbers to life imprisonment inshooting death case of former AIADMK MLA Sudarshanam  
தமிழ்நாடு

முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு:பவாரியா கொள்ளையர்களுக்கு ஆயுள் தண்டனை

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், பவாரியா கொள்ளையர் மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Kannan

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி, எம்எல்ஏவாக இருந்தவர் அதிமுகவை சேர்ந்த கே.சுதர்சனம். இவர், பெரியபாளையம் அருகே உள்ள தானாகுளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி அவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கி கொண்டிருந்தார்.

பவாரியா கும்பல் அட்டூழியம்

அப்போது ஆயுதங்களுடன் வந்த வட மாநிலத்தை சேர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, சுதர்சனத்தின் மகன்களான விஜயகுமார் மற்றும் சதீஷ்குமாரை ஆயுதங்களால் தாக்கியது.

சுதர்சனம் சுட்டுக் கொலை

வீட்டின் மாடியில் துாங்கிக் கொண்டிருந்த சுதர்சனம், சத்தம் கேட்டு கீழே வந்தார். அந்தக் கும்பல் அவரை துப்பாக்கியால் சுட்டதில், சுதர்சனம் உயிரிழந்தார்.

நகை, பணம் கொள்ளை

பின்னர், அந்தக் கும்பல் சுதர்சனம் வீட்டில் இருந்த 62 சவரன் நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பிச் செல்ல முயன்றது. துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள், கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி அந்த கும்பல் தப்பிச் சென்றது.

ஜாங்கிட் தலைமையில் தனிப்படை

தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்தக் கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க, அப்போது ஐஜியாக இருந்த ஜாங்கிட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

பவாரியா கொள்ளையர்கள் கைது

தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் மற்றும் ராகேஷ், ராஜஸ்தானை சேர்ந்த அசோக், பஞ்சாபை சேர்ந்த ஜெயில்தர் சிங் மற்றும் மூன்று பெண்கள் உள்பட 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்; அவர்களில், ஒன்பது பேரை கைது செய்தனர்.

தலைமறைவான 10 பேர்

இவர்களில் சிறையில் இருந்த ஓம்பிரகாஷ் உள்பட இருவர் இறந்தனர். ஜாமினில் வெளியே வந்த மூன்று பெண்கள் தலைமறைவாகினர். அந்த பெண்கள் உள்பட, 10க்கும் மேற்பட்டோர் தற்போது வரை தலைமறைவாகவே உள்ளனர்.

நான்கு பேர் மீது விசாரணை

மற்ற நான்கு பேர் மீதான வழக்கு விசாரணை, சென்னை 15வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 20 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில், 50க்கும் மேற்பட்டோர் சாட்சியம் அளித்தனர். போலீசார் தரப்பில் கூ டுதல் அரசு வழக்கறிஞர் ஜி. சீனிவாசன் ஆஜரானார். குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு, வழக்கறிஞர் சிவாஜி ஆகியோர் வாதாடினர்.

மூன்று பேர் குற்றவாளிகள்

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளிகள் என, நீதி பதி எல். ஆபிரகாம் லிங்கன் கடந்த 21ம் தேதி அறிவித்தார். இதைத்தொடர்ந்து அவர்களுக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டது.

மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை

அதன்படி, கூட்டுக் கொள்ளை, கொலை மற்றும் பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தியது, குற்றத்திற்கு துாண்டியது போன்ற குற்றச் சாட்டுகளின் கீழ், குற்றவாளிகள் ஜெகதீஷ், அசோக் ஆகியோருக்கு, தலா நான்கு ஆயுள் தண்டனையும், தலா, 40,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

மற்றொரு குற்றவாளியான ராகேஷுக்கு, கூட்டுக்கொள்ளை, கொலை மற்றும் பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தியது, ஆயுத சட்டம் போன்ற குற்றச்சாட்டின் கீழ், ஐந்து ஆயுள் தண்டனையும், 50,000 ரூ பாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஜெயில்தர் சிங் விடுதலை

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயில்தர் சிங் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதால், அவரை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். ஒவ்வொரு குற்றச்சாட்டின் கீழும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, ஒன்றன் பின் ஒன்றாக, குற்றவாளிகள் மூவரும் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஆணை பிறப்பித்தார்.

=================