காவிரி குறுக்கே புதிய அணை
காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகா அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் டி.கே. சிவக்குமாரும், அணை கட்டியே தீருவோம் என்பதில் உறுதியாக நிற்கிறார்.
கர்நாடகா முயற்சி - தமிழகம் எதிர்ப்பு
இது தமிழகத்தின் நலனை பெரிதும் பாதிக்கும். காவிரி வறண்டால், டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் என்பதால், தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
சட்டசபையில் தனித்தீர்மானம்
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்று இருக்கும் தவெக அரசு, கர்நாடகத்தின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சட்டசபையில் இன்று தனித்தீர்மானம் கொண்டு வந்தது.
முதல்வர் விஜய் கொண்டு வந்தார்
தனித்தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் விஜய் பேசினார். “ நமது விவசாயிகளுக்காகவும், மக்களுக்காகவும் நிற்பது நமது கடமை, கட்சி பாகுபாடின்றி ஒருமித்த கருத்தோடு இந்த தீர்மானத்தை அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும் முதல்வர் விஜய் கேட்டு கொண்டார்.
மத்திய அரசு அனுமதி தரக்கூடாது
தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட எந்த அனுமதியையும் ஒன்றிய அரசு தர கூடாது என வலியுறுத்தினார். "காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு மேகதாட்டு அணை கட்ட முயற்சி செய்வதை ஏற்க முடியாது .
காவிரி பற்றாக்குறை படுகை
காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும், காவிரிப்படுகை ஒரு பற்றாக்குறை படுகை எனக் குறிப்பிட்டு, படுகையின் மொத்த நீரினையும், படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டன.
புதிய திட்டங்களுக்கு அனுமதியில்லை
எனவே, காவிரிப்படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரை பயன்படுத்தவோ இயலாது. காவிரிப் பிரச்னை தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுபூர்வமான பிரச்னையாகும்.
புதிய அணை கட்ட முடியாது
ஆதலால், கர்நாடக அரசு மேகதாட்டுவிலோ அல்லது காவிரிப்படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தை, பிற படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசினை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.
மத்திய அரசு அனுமதிக்க கூடாது
கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய நீர்வள குழுமத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது.
கர்நாடகா முயற்சியை முறியடிப்போம்
கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவிக்க வேண்டும் என்று” தனித் தீர்மானத்தில் முதல்வர் விஜய் கேட்டுக் கொண்டார்.