தாமதமாக திறக்கப்பட்ட மேட்டூர் அணை
குறுவை சாகுபடிக்காக வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12ம் தேதி, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.
ஆனால், போதிய நீர் இருப்பு இல்லாததது, கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாதது போன்ற காரணங்களால் நடப்பு ஆண்டில் குறிப்பிட்ட தேதியில் மேட்டூர் அணையிலிருந்து, தமிழ்நாடு அரசால் தண்ணீர் திறந்துவிட முடியவில்லை.
மேட்டூர் அணை நீர் திறப்பு
இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, செப்டம்பர் 1ம் தேதி முதல் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது.
சேலத்தில் முதல்வர் விஜய்
அதன்படி, முதல்வர் விஜய் தண்ணீரை திறந்து விட வருவதால், மேட்டூரில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் சேலம் சென்றார் முதல்வர் விஜய்.
அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து வேன் மூலம் சென்ற முதல்வருக்கு, வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.
மேட்டூரில் முதல்வர் விஜய்
மேட்டூர் சென்றடைந்த முதல்வர் விஜய், காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் அணை பகுதிக்கு சென்ற அவருக்கு மேட்டூர் அணை தொடர்பான வரலாறை அதிகாரிகள் எடுத்துக் கூறினார்கள். பின்னர் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர்
மதகுகள் வழியாக சீறிப் பாய்ந்து வந்த காவிரி நீரை, மலர் தூவி, வணங்கினார் முதல்வர் விஜய். வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
பின்னர் அங்கு ஏற்புபாடு செய்யப்பட்டு இருந்த புகைப்பட கண்காட்சியை முதல்வர் பார்வையிட்டார். அவருக்கு அதிகாரிகள் விளக்கினர். 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.
விவசாயிகள் எதிர்பார்ப்பு
ஜுன் மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணையை நம்பி தான் ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடியை விவசாயிகள் தொடங்குவார்கள். சுமார் நான்கு மாதங்களுக்கான இந்த பாகத்திற்கு குறைந்தபட்சம் 100 நாட்களாவது நீர் பாசனம் தேவைப்படுகிறது.
ஆனால், அணையிலிருந்து 45 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏமாற்றமளிக்கும் விதமாக இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அதேநேரம், அணையில் உள்ள நீர் இருப்பின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவேளை நீர் வரத்து அதிகரித்தால் அதற்கேற்ப தண்ணீரை வெளியேற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.
62வது முறையாக தாமதமாக திறப்பு
93வது முறையாக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் நிலையில், 62வது முறையாக தாமதமாக திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேல் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி
பொதுவாக டெல்டா விவசாயிகளை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம். திருச்சி, தஞ்சை, அரியலூர் போன்ற மேல் டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான நிலங்கள் போர்வெல் வசதியை கொண்டிருக்கின்றன.
இங்கு காவிரி நீர் வராவிட்டாலும் ஜூன் மாதம் குறுவை சாகுபடியை தொடங்கி விடுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டும் சாகுபடி நடைபெற்று வருகிறது.
மழை குறைந்து நீர்மட்டம் சரிந்து இருப்பதால், மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு குறுவை சாகுபடியை முடித்துக்கொள்வார்கள். அவர்களுக்கு மேட்டூர் அணையின் நீர் போதுமானதாக இருக்கும்.
கீழ் டெல்டா விவசாயிகள் அதிருப்தி
அதேநேரம், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போன்ற கீழ் டெல்டா மாவட்டங்களில் போர்வெல் என்கிற செட்டப்பே கிடையாது. முழுக்க முழுக்க இவர்கள் மேட்டூரிலிருந்து வரும் காவிரி நீரை மட்டுமே நம்பி குறுவை சாகுபடி செய்கிறார்கள்.
45 நாட்கள் தண்ணீர் போதாது
இவர்களுக்கு 45 நாட்கள் தண்ணீர் போதுமானதாக இருக்காது. இதை நம்பி குறுவை சாகுபடியை தொடங்கினால், பெரிய அளவில் நஷ்டம் ஏற்படவே வாய்ப்புள்ளது. இதனால் தான் தற்போது அணை திறக்கப்பட்டாலும் அது கீழ் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பலன் தராது என்று சொல்லப்படுகிறது.
விவசாயிகள் கோரிக்கை
விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க மேட்டூர் அணை நீர் வெளியேற்றத்தை 45 நாட்களுடன் நிறுத்தாமல், குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1 டிஎம்சி என்கிற விகிதத்தில் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
கர்நாடகா தண்ணீர் திறக்குமா?
ஆனால் இதை செய்ய அணைக்கான நீர்வரத்து சீராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்திற்கான தண்ணீரை கர்நாடகா அரசு வழங்க வேண்டியது அவசியமாகும்.
=============