முதலமைச்சர் அலுவலகம்
தமிழக முதல்வரின் அதிகாரப்பூர்வ அலுவலகம் தலைமைச் செயலகம் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வருகிறது.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை தலைமைக் கட்டிடத்தின் முதல் மாடியில் முதல்வர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகும், அங்கு தான் அதிகாரப்பூர்வ அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
முதல்வர் அலுவலகம் மாற்றம்
அதிகளவில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் வருகை தருவதால் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு முதல்வர் அலுவலகத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் கவிஞர் மாளிகை
அத்னபடி, முதல்வர் விஜயின் அலுவலகம் (CMO) விரைவில் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்பட உள்ளது. இதற்கான சீரமைப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள்
நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் 34 அரசு துறைகளின் செயலாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
10 வது மாடியில் முதல்வர் அலுவலகம்
10 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தின் 10-வது மாடியில், கடலை நேரடியாகக் காணக்கூடிய இடத்தில் முதல்வர் அலுவலகம் அமைக்கப்படவுள்ளது.
மாற்றம் செய்யும் பணிகள் தீவிரம்
முதல்வர் அலுவலகத்தை மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித் துறை (PWD) தொடங்கியுள்ளது.
நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் உள்ள மாநாட்டு அரங்கிற்கு அருகிலுள்ள உணவக பகுதி, முதல்வர் அலுவலகமாக மாற்றப்பட உள்ளது.
அங்குள்ள மேஜைகள், நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றப்படவுள்ளன.
அரசு துறைகளும் வேறு இடத்திற்கு மாற்றம்
முதல்வர் அலுவலகம் மாற்றப்படுவதால், தற்போது 10-வது மாடியில் இயங்கி வரும் சில அரசு துறைகளும் இடமாற்றம் செய்யப்படுகின்றன.
தகவல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை, உள்துறை (மதுவிலக்கு பிரிவு) மற்றும் வணிக வரித்துறை ஆகியவற்றின் சில பிரிவுகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட உள்ளன.
தகவல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை கலைவாணர் அரங்கத்தில் செயல்படவுள்ளது. மற்ற இரண்டு துறைகளின் பிரிவுகள் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்திற்குள்ளேயே மாற்று இடங்களில் இயங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திமுக ஆட்சியில் ஓமந்தூரார் தோட்டம்
2010ம் ஆண்டு, அப்போதைய தி.மு.க ஆட்சியில் தலைமைச் செயலகம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திற்கு மாற்றப்பட்டது.
அப்போது பொதுத்துறை, சட்டப்பேரவைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய துறைகள் அங்கு செயல்பட்டன.
ஜெயலலிதா ஆட்சியில் மீண்டும் கோட்டைக்கு...
2011ம் ஆண்டு ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தலைமைச் செயலகம் மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்திற்கே மாற்றப்பட்டது.
அரசின் முக்கிய நிர்வாக மையம்
1975ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட நாமக்கல் கவிஞர் மாளிகை, பார்ஸ்ன் ஃபவுண்டேஷன் அண்ட் இன்ஜினியரிங் நிறுவனத்தால் கட்டப்பட்டது.
பின்னர் பல கட்டங்களாக புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கட்டிடம், தற்போது தமிழக அரசின் முக்கிய நிர்வாக மையமாக செயல்பட்டு வருகிறது.
முதல்வர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்படுவது, தமிழக தலைமைச் செயலக நிர்வாகத்தில் முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது.
இடவசதி சிக்கலை தீர்ப்பதோடு, நிர்வாகப் பணிகளை மேலும் திறம்பட மேற்கொள்ளும் நோக்கத்திலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்..
==========