Climax in AIADMK: S.P. Velumani's Faction Joins Forces with Edappadi Palaniswami!|tamilnadu  source:x.com
தமிழ்நாடு

அ.தி.மு.க-வில் க்ளைமாக்ஸ்: எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தது எஸ்.பி.வேலுமணி அணி! 'நமது அம்மா' நாளிதழிலும் அதிரடி மாற்றம்!

இரு அணிகளும் அதிகாரப்பூர்வமாக இணைந்தது குறித்து, அ.தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தங்களது 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு முக்கியப் பதிவை வெளியிட்டுள்ளது.

Kavitha prasanna

அதிமுக உட்கட்சி பூசல்

தமிழக அரசியல் களம் எப்போதும் பரபரப்புகளுக்குப் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வுக்குள் நிலவி வந்த உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது ஒரு சுமுகமான முடிவுக்கு வந்துள்ளன.

எஸ்.பி.வேலுமணி தரப்பு

கடந்த சில வாரங்களாக அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி, மீண்டும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அதிகாரப்பூர்வமாக ஒன்றிணைந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மன்னிப்பு கடிதம்

அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகியான எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி பழனிசாமியுடனான தங்களுக்குள் இருந்த அனைத்து கருத்து வேறுபாடுகளும் முழுமையாக நீங்கிவிட்டதாக தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி

இதனைத் தொடர்ந்து, எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பின் போது, தங்களுக்குள் இருந்த பிணக்குகளை மறந்து மீண்டும் இணைந்து செயல்படும் விதமாக, எடப்பாடி பழனிசாமியிடம் அவர்கள் தங்களது மன்னிப்பு கடிதத்தையும் வழங்கியுள்ளனர்.

'நமது அம்மா' நாளிதழில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி பெயர்

அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'நமது அம்மா' பத்திரிகையின் நிறுவனராக எஸ்.பி.வேலுமணி மட்டுமே இருந்து வந்தார். முன்னதாக, எஸ்.பி.வேலுமணி அணி தனியாகப் பிரிந்து சென்ற சமயத்தில், இந்த நாளிதழின் முகப்பில் இருந்து எடப்பாடி கே. பழனிசாமியின் பெயர் நிறுவனர் பதவியில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டது.

'நமது அம்மா' நாளிதழிலும் அதிரடி மாற்றம்

தற்போது இரு அணிகளும் மீண்டும் ஒன்றிணைந்துள்ளதை அடுத்து, உடனடியாக 'நமது அம்மா' நாளிதழிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, நாளிதழின் முகப்பில் 'நிறுவனர்கள்: எடப்பாடி கே. பழனிசாமி & எஸ்.பி.வேலுமணி' என எடப்பாடி பழனிசாமியின் பெயர் மீண்டும் பெருமையுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் அ.தி.மு.க ஐ.டி.விங் பதிவு

இரு அணிகளும் அதிகாரப்பூர்வமாக இணைந்தது குறித்து, அ.தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தங்களது 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு முக்கியப் பதிவை வெளியிட்டுள்ளது.

அந்தப் பதிவில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வாசகங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

"எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்"

மேலும், கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்து நின்று கொண்டிருக்கும் இந்த எஃகு கோட்டையை இனி யாராலும் அசைக்க முடியாது என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இனி நமக்குள்ளே பிரிவில்லை... இலக்கு இரட்டை இலை மட்டும்தான்!"

அ.தி.மு.க ஐ.டி விங்கின் அதிகாரப்பூர்வப் பதிவில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது.

பிரிவுகளுக்கு முற்றுப்புள்ளி

அ.தி.மு.க-விற்குள் இனி எவ்வித பிரிவுகளும் இல்லை என்றும், இந்த இரும்பு கோட்டையைத் தகர்க்க இனி எதிரிகளுக்கு எந்த வழியும் இல்லை என்றும் தொண்டர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதிமுகவின் ஒரே இலக்கு

கட்சியின் தற்போதைய ஒற்றை இலக்கு, கோட்டையில் மீண்டும் நமது பாரம்பரியமிக்க 'இரட்டை இலை' கொடியைப் பறக்கவிடுவது மட்டுமே ஆகும். 'நாளை நமதே... தமிழ்நாடும் நமதே...' என்ற முழக்கத்துடன் இந்த பதிவு நிறைவடைந்துள்ளது.

இரு அணிகளின் இந்த திடீர் இணைப்பானது அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

====