பத்திர பதிவுக்கு நீண்ட நேரம் காத்திருப்பு
தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்ற பிறகு, புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பத்திர பதிவு அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருந்து பத்திரங்கள் பதிவு செய்யும் நடைமுறை இருந்து வருகிறது.
வருகையில்லா ஆவணப்பதிவு
இந்த நிலையில் வருகையில்லா ஆவணப்பதிவானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தவெக அரசு பதவியேற்ற 100 நாளில் புதிய திட்டமாக இந்த திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்துள்ளார்.
முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
இதன் படி, வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், தமிழ்நாட்டில் உள்ள மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆவணங்களைப் பதிவுத்துறையில் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு (Presenceless Registration) மூலம் மட்டுமே கட்டாயமாகப் பதிவுசெய்யும் நடைமுறையைத் தொடங்கி வைத்தார்.
பொதுமக்கள் நேரில் வரத் தேவையில்லை
இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் (Anywhere Registration) பதிவுத்துறை இணையதளத்தின் மூலம் இணையவழியில் தங்களது ஆவணங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும்.
பொதுமக்களுக்கு எளிதான சேவையை வழங்கவும் நேரில் வருகையற்ற பதிவு (Presenceless Registration) முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆகிய ஆவணங்களைத் தற்போது பதிவு செய்யலாம். இம்முறையில் ஆவணங்களை இணையவழியில் சமர்ப்பிக்க இயலும் என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வருகைதர வேண்டிய அவசியம் தவிர்க்கப்படுகிறது.
பதிவு செய்யும் முறை
* பதிவுத்துறை இணையதளத்தில் தங்களது உள்நுழைவினைத் தாங்களே உருவாக்கி மேற்படி ஆவணங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.
* ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் ஆகிய அனைவருக்கும் ஆதார் அட்டை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
* ஆதார் ஆணையத்தின் மூலம் கைரேகை அல்லது கருவிழிப் படலம் வழி ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும்.
முக்கிய அம்சங்கள்
* இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை சார்பதிவாளர்கள் 24 மணி நேரத்திற்குள் பதிவு செய்தோ அல்லது திருத்தத்திற்காக திருப்பி அனுப்பியோ அல்லது நிராகரித்தோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சார்பதிவாளர்களால் உள்ளபடி சரிபார்க்கப்பட்டு, சட்ட விதிகளுக்குட்பட்டு பதிவு செய்யப்படும்.
* திருத்தத்திற்காகத் திருப்பி அனுப்பப்படும் ஆவணங்களைத் திருப்பி அனுப்பப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தேவையான திருத்தங்களுடன் மீண்டும் சமர்ப்பிக்கலாம்.
* பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் சார்பதிவாளர் டிஜிட்டல் கையொப்பமிட்டு, ஆவணப் பதிவிற்காக உருவாக்கப்பட்ட பயனர் உள்நுழைவில் அவை கிடைக்கச் செய்யப்படும்.
* 60 நாட்கள் முடிந்த பின்னர், பொதுமக்கள் நடைமுறையில் உள்ள முறையின்படி சான்றிட்ட நகலுக்கு (Certified Copy) விண்ணப்பித்து பதிவு செய்யப்பட்ட ஆவணத்தைப் பெறலாம்.
பாதுகாப்பு அம்சங்கள்
* ஆவணத்தின் பதிவுச் சான்றுரை (Endorsement) ஒவ்வொரு முறையும் மாறுபடும் ஐந்து நிறங்களைக் கொண்ட தானியங்கி சீரற்ற நிற அமைப்பில் (Dynamic Random Five Colours) அச்சிடப்படும்.
* சான்றிட்ட நகல் கோரப்படும் போது கருப்பு-வெள்ளை நகல் மட்டுமே வழங்கப்படும்.
* அசல் நிற டிஜிட்டல் நகல் பொதுமக்களின் உள்நுழைவில் 60 நாட்கள் வரை கிடைக்கும்.
* இதனால் அசல் ஆவணத்தின் பதிவுச் சான்றுரையில் இடம்பெற்ற நிற அமைப்பை ஆவண உரிமையாளர் அறிந்துகொள்ள இயலும்.
* போலி ஆவணம் உருவாக்குவதைத் தடுக்கும் கூடுதல் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆவணத்தில் டிஜிட்டல் கையொப்பம்
* ஆவணத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் QR குறியீடு இடம்பெறும்.
* அதில் ஆவண எண், ஆவணத்தின் தன்மை மற்றும் பதிவு செய்யப்பட்ட தேதி ஆகிய விவரங்கள் இடம்பெறும்.
* பதிவு அலுவலர் ஆவணத்தில் டிஜிட்டல் கையொப்பமிடுவார். காகித ஆவணத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட ஆவணத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கலாம்.
* டிஜிட்டல் ஆவணம் மாற்றம் செய்யப்பட்டால், டிஜிட்டல் கையொப்பச் சரிபார்ப்பில் "X" குறியீடு தோன்றுவதன் மூலம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை அறியலாம்.
பொதுமக்கள் நலனுக்காகவும், பதிவு நடைமுறையை எளிமைப்படுத்தி, வெளிப்படைத்தன்மையோடு செயல்படுத்திடும் வகையிலும் மனைப்பிரிவிற்கான முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கான முதல் வீடு விற்பனை ஆவணத்தை பதிவுத்துறையில் வருகையில்லா ஆவணப்பதிவு முறையின்கீழ் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
===============