தோழர் நல்லகண்ணு உடலுக்கு அரசு மரியாதை
Communist Party Comrade Nallakannu Funeral : தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு, அவர் கடைசியாக விரும்பிய படி அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
101 வயதிலும் அயராத உழைப்பு
சுதந்திர போராட்ட வீரரும் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு 101 வயதிலும் அயராது உழைத்தவர்.
நல்லகண்ணுவின் போராட்டங்கள்
விடுதலைப் போராட்டம் தொடங்கி, விவசாயிகள் போராட்டம், தீண்டாமை எதிர்ப்பு, கனிமவள கொள்ளைக்கு எதிரான போராட்டங்கள் என நல்லக்கண்ணு எதிர்கொள்ள போராட்டங்களை கணக்கெடுக்க முடியாது.
சமூக நீதி போராளியாக எப்போதும் குரல் கொடுத்து, களத்தில் தன்னை முன்னிறுத்திக் கொண்ட உண்மையான கம்யூனிஸ்ட் தான் நல்லக்கண்ணு.
18 வயது முதல்...
18 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து ஏழை தொழிலாளர்கள், விவசாயிகளின் உரிமைக்காக போராடத் தொடங்கியவர், 93 வயதிலும் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து அதை தடுத்து நிறுத்தினார்.
தகைசால் தமிழர் விருது
தனது 80 ஆவது வயதில் தகைசால் விருதுடன் முதல்வர் கொடுத்த 1 கோடி ரூபாயை மட்டுமல்லாது அதனுடன் தான் வைத்திருந்த 5000 ரூபாயையும் சேர்த்து முதலமைச்சர் நிவாரணத் தொகைக்கு கொடுத்துவிட்டார்.
80 ஆண்டுகால அரசியல் பயணம்
101 வயது எப்போதும் எளிமை, எளிமை இதுதான் தோழர் நல்லகண்ணு. 80 ஆண்டுகால அரசியல் பயணம் அவரின் அறம் சார்ந்த வாழ்க்கைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு.
கடைசிவரை வீடு கிடையாது, கார் கிடையாது, மாதம் 2,000 ரூபாயில் மிகவும் யதார்த்தமான வாழ்க்கை என நாடே போற்றும் தலைவராக வாழ்ந்து விடை பெற்று இருக்கிறார் நல்லகண்ணு.
எளிமை, நேர்மை, அயராத அர்ப்பணிப்புக்கு அரசியல்வாதிகளில் ரோல் மாடல் யார் என்றால், அனைவரும் நல்லகண்ணுவை தான் கை காட்டுவார்கள்.
இளைய தலைமுறைக்கு அரசியல் என்றால் என்ன? அதில் எப்படி நேர்மையை கடைபிடிப்பது, மக்களுக்காக எப்படி பாடுபடுவது என்று பாடம் எடுக்க விரும்பினார், நல்லகண்ணு வாழ்க்கையை படிக்க சொன்னால் போதும்.
அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்து இருக்கிறோம் என்பதே பெருமைக்குரிய விஷயமாகும்.
கண்ணீர்மல்க அஞ்சலி
101 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்திய அவருக்கு முதல்வர் ஸ்டாலின், திருமாவளவன், அன்புமணி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், ரஜினிகாந்த் , சூர்யா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பாலன் இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு பொதுமக்களும் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.
வீர வணக்கம்..செவ்வணக்கம்
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு வாழ்நாள் போராளிக்கு வீர வணக்கம்.. செவ்வணக்கம் என முழக்கம் தெரிவித்து 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது.
கடைசி விருப்பம்
இதைத்தொடர்ந்து நல்லக்கண்ணுவின் கடைசி விருப்பப்படி அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.