தமிழக வெற்றிக் கழகம்
கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை சந்தித்த விஜய் தலைமையிலான தவெக, 108 இடங்களை கைப்பற்றியது.
தவெகவை ஆதரிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்
இதன் காரணமாக திமுக ஆட்சி கவிழ, அதிமுகவும் கணிசமான இடங்களில் தோல்வியை தழுவியது. தேர்தலுக்கு பிறகு காட்சிகள் மாறி தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக என திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு கொடுத்தன.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி
இதனால், தவெக ஆட்சி அமைக்க, விஜய் முதல்வரானார். காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்று இருக்கின்றன.
இதன்மூலம் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வழி ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார் முதல்வர் விஜய்.
59 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழகத்தில் அதிகாரத்திற்கு வந்து இருக்கிறது காங்கிரஸ் கட்சி.
தோழமை கட்சிகள் கூட்டம்
இந்தச்சூழலில் கூட்டணியை ஒருங்கிணைத்து கொண்டு செல்லும் வகையில், தவெக தலைமையில் தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் மாமல்லபுரத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.
விஜய் தலைமையில் ஆலோசனை
முதல்வர் விஜய் முன்னிலையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தோழமை கட்சிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
தமிழக வெற்றி கழகம் சார்பில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும் அமைச்சர்களான ஆனந்த், ஆதவ் அர்ஜுன் ஆகியோர் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து அழைத்து விடுத்தனர்.
இடதுசாரிகள் புறக்கணிப்பு
ஆவோசனைக் கூட்டத்தை புறக்கணிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவிக்கையில், "தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிப்பது தொடரும் என்ற நிலைபாட்டை எடுத்துள்ளோம். மேலும் ஆட்சிக்கு தேவையான ஆதரவை அளிப்பதாகவும் கூறியுள்ளோம்.
அதே நேரத்தில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்வதில்லை எனவும் முடிவெடுத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி பங்கேற்பு
காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறது. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், "தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெறும் தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறோம்.
எம்பிக்கள், அமைச்சர்கள் பங்கேற்பு
காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இரண்டு அமைச்சர்கள், மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளோம். எங்களைப் பொறுத்தவரை இந்த அழைப்பு தோழமைக் கட்சிகளுக்கான அழைப்பு. தமிழக வெற்றிக் கழகம் கொடுத்திருக்கும் அழைப்பை ஏற்று பங்கேற்கிறோம்" என்று தெரிவித்தார்.
=================